கல்வித்துறை சிறப்பு அரசாணை ஆசிரியர் கலந்தாய்விற்கு முட்டுக்கட்டையா: ஆசிரியர்கள் அதிருப்தி

சிவகங்கை:கல்வித்துறை செயலரின் சிறப்பு அரசாணையால் ஆசிரியருக்கான பொது பணி மாறுதல் கலந்தாய்வில் தாமதம் ஏற்படுகிறது என ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கும்.


கோடை விடுமுறையில் நடத்தினால் மாறுதல் பெறுவோர் குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்தல், வீடு மாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்ள வசதியாக இருக்கும் என்ற நோக்கில் மே மாதத்தை பள்ளிக்கல்வித்துறை தேர்ந்தெடுத்தது.2015--16ம் கல்வியாண்டுக்கான பதவி உயர்வு, பணி மாறுதல் கலந்தாய்வு இதுவரை நடக்கவில்லை. சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்து, கலந்தாய்வு நடக்கலாம் என, எதிர்பார்த்தவர்களின் நம்பிக்கை வீணானது. தேர்தல் முடிந்தும் அதற்கான அறிகுறி ஏதுமில்லை..
ஆசிரியர் சங்கத்தினர் கூறியதாவது: கடந்த ஆண்டு அரையாண்டு தேர்வையொட்டி பள்ளிக்கல்வித்துறை செயலர் சிறப்பு அரசாணை ஒன்றை பிறப்பித்தார்.

அதில்,அரையாண்டு தேர்வு நெருங்குவதால் ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் எதுவும் வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டது. இதை ரத்து செய்தால் மட்டுமே பொது மாறுதலுக்கான கலந்தாய்வு விதிமுறை அரசாணை வெளியிட முடியும்.கல்வித்துறை செயலர் நினைத்தால் மட்டுமே இது முடியும் என்பதால், இது தொடர்பாக கோரிக்கை மனுக்கள் அனுப்பியுள்ளோம்.
அவருடன் பேசுவதற்கான வாய்ப்பு பெற முயற்சித்து வருகிறோம். காலாண்டு தேர்வு நெருங்குவதற்குள் பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும். இல்லையெனில் மாறுதல் எதிர்பார்த்த பல ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி, மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கும், என்றனர்.