வருமான வரி கட்டாத கல்வித்துறை: நோட்டீசால் ஆசிரியர்கள் அலறல்

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களிடம் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டும், வருமான வரித் துறையில் இருந்து, 'நோட்டீஸ்' வந்ததால், ஆசிரியர்கள் பீதி அடைந்து உள்ளனர். கல்வித் துறையின்
நிர்வாக பிரச்னையால், இந்தக் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின், மாத ஊதியத்தில், வருமான வரித் தொகையான டி.டி.எஸ்., பிடித்தம் செய்யப்படுகிறது. மாதம் தோறும் இந்தத் தொகையைக் கல்வித் துறையின் நிதிப் பிரிவினர், வருமான வரித் துறை அலுவலகத்தில் செலுத்த வேண்டும். நிதி ஆண்டின் இறுதியில், ஆசிரியர்களுக்கு வருமான வரி விவரங்கள் அடங்கிய படிவம், வருமான வரித் துறையால் வழங்கப்படும். வருமானம் மற்றும் செலவு தொடர்பான, 'ரிட்டர்ன்' அறிக்கையை, ஆசிரியர்கள் தனித்தனியே தாக்கல் செய்வர்.
ஆனால், சில ஆண்டுகளாக, அரசு உதவி பெறும் பள்ளிகளின் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு வருமான வரி பிடித்தம் செய்தும், அந்த தொகையை, வருமான வரித் துறையில் செலுத்தவில்லை. அதனால், வருமான வரித் துறையில் இருந்து அவர்களுக்கு 'நோட்டீஸ்' வந்துள்ளது. இதனால், ஆசிரியர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
ஆசிரியர்களிடம் மாதச் சம்பளத்தில் வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால், நாங்கள் வரி கட்டவில்லை என்பது போல், நோட்டீஸ் வருகிறது. இதனால், வங்கிகளில் கடனும் பெற முடியவில்லை
ஆசிரியர்கள்
இந்தப் பிரச்னை குறித்து, நிதித் தணிக்கை செய்து வருகிறோம். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளத்தில் உள்ள பிரச்னையால், குழப்பம் ஏற்பட்டு உள்ளது. விரைவில் சரி செய்யப்பட்டு விடும். இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கடிதம் கொடுக்க உள்ளோம்

கல்வி துறையினர்