மொபைல் போன் பயன்படுத்தினால் கேன்சர் வரும் ; ஆய்வில் தகவல்.

மொபைல் போன்கள் பயன்படுத்துவதால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. புற்றுநோய் மட்டுமின்றி மேலும் பல நோய்கள் ஏற்படவும் மொபைல் காரணமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
           மொபைல் போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்களால் முறையற்ற வளர்சிதை மாற்றங்கள் மட்டுமின்றி நரம்பியல் நோய்கள், புற்றுநோய் உள்ளிட்ட பல உடல்நல பாதிப்புக்கள் ஏற்படும் என சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முறையற்ற வளர்ச்சிதை மாற்றங்களால் உடலில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் துகள்கள், ஆன்டி ஆக்சிடென்டுகளுடன் வினைபுரிய துவங்குவதால் சுவாச கோளாறுகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்னல் எலக்ட்ரோமேக்னடிக் பயாலஜி மற்றும் மருந்துகள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், கதிர்வீச்சுக்களால் உடல் செல்களில் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் மாற்றங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் புற்றுநோய் மட்டுமல்ல தொடர் தலைவலி, உடல்சோர்வு, தோல் வியாதிகள் போன்றவைகளும் மொபைல் போன் அதிகம் பயன்படுத்துபவர்களை பாதிக்கும் என கூறப்படுகிறது. இவைகள் நீண்ட நாளைய பாதிப்புகளாக மாறவும் வாய்ப்பிருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு சர்வதேச புற்றுநோய் ஆய்வு கழகம் நடத்திய ஆய்விலும், கதிர்வீச்சுக்களால் தான் புற்றுநோய் அதிகம் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மொபைல் போன் மட்டுமின்றி வயர்லெஸ் இன்டர்நெட் பயன்படுத்துவதாலும் புற்றுநோய் அபாயம் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.