அரசு தொடக்கப் பள்ளிகளில்,
டி.வி.டி., பிளேயர் பழுது, 'சிடி' காணாமல் போனது மற்றும் போதிய
பயிற்சியின்மையால், ஆங்கில உச்சரிப்புப் பயிற்சிக்கு, ஆசிரியர்கள் முழுக்கு
போட்டுள்ளனர். இதனால், ஆங்கில வழி வகுப்புகளிலும் தமிழிலேயே பாடம்
நடத்தப்படுகிறது.
அனைத்துத்
தொடக்கப் பள்ளிகளிலும், ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கவும், ஆங்கில மொழி
உச்சரிப்பு வீடியோவுடன் கூடிய, 'சிடி'க்கள் மூலம், பாடம் கற்பிக்கவும்
உத்தரவிடப்பட்டது. இதற்காக, தொடக்கப் பள்ளிகளுக்கு, இரண்டு, 'சிடி'க்கள்
வழங்கப்பட்டன. இவற்றை வழங்கி, ஓர் ஆண்டைத் தாண்டிவிட்ட நிலையில், ஆங்கில
உச்சரிப்புப் பயிற்சி வகுப்பு பெரும்பாலான பள்ளிகளில் துவங்கப்படவில்லை.
இதுகுறித்து,
தொடக்கப் பள்ளி இயக்குனரகம் பிறப்பித்த உத்தரவின்படி, பள்ளிகள் தோறும்
ஆய்வு நடத்தியதில், பல இடங்களில், 'சிடி'க்கள் சரியாக, 'பிளே' ஆகாததால்,
பயிற்சியைச் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை எனத் தெரிந்தது. ஆங்கில மொழி
உச்சரிப்பு சரியாகத் தெரிந்த ஆசிரியர்களுக்கும் பற்றாக்குறை உள்ளதால்,
இந்தத் திட்டம் கிணற்றில் போட்ட
கல்லாகி விட்டது.
இதுகுறித்து, ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
ஒன்றாம்
வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரையில், இந்தப் பயிற்சி வகுப்பு எடுக்க
உத்தரவிடப்பட்டது. ஆனால், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களில் பலர் அடிப்படை
ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர்கள் என்பதால், சிறப்புப் பயிற்சி இல்லாமல்,
அவர்களால், இந்தப் பாடங்களை எடுக்க முடியவில்லை. அடுத்த கட்ட ஆக்கப்பூர்வ
நடவடிக்கையை, கல்வித் துறை மேற்கொண்டால் தான், இந்தக் கல்வி ஆண்டில்
இருந்தாவது, மாணவர்களுக்குச் சரியாகப் பயிற்சி அளிக்க முடியும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.