மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகப் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 5-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார்.
 இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக
த்தின் நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்தியின் ஓட்டுநர், உதவியாளர் பணியிடத்திற்கு தொகுப்பூதியத்திலும், அலுவலக இரவு காவலர் பணியிடத்திற்கு காலமுறை ஊதியத்திலும் பணிபுரிய தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
 இதில், ஓட்டுநருக்கு ரூ.8 ஆயிரம், உதவியாளருக்கு ரூ.5 ஆயிரம், இரவு காவலருக்கு ரூ. 4,800 முதல் 10,000 வரையிலும், தர ஊதியம் ரூ.1,300 சேர்த்து தொகுப்பூதியமாக வழங்கப்பட உள்ளது.
 ஓட்டுநர் பணியிடத்துக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். உதவியாளர் பணியிடத்துக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவராகவும், இரவு காவலர் பணியிடத்துக்கு பொது (முன்னுரிமை பெறாதவர்கள்) மாற்றுத்திறனாளிகளில் 40 சதவீதத்திற்குள் கால் ஊனம் உள்ளவராகவும், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவராகவும் இருத்தல் வேண்டும்.
 வயது வரம்பு: எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 35 வயதுக்குள்ளும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (எம்பிசி,டிஎன்சி, பிசி) 32 வயதுக்குள்ளும், பொது பிரிவினருக்கு 30 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.
 மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
 மேற்படி, தகுதியும், விருப்பமும் உடைய சென்னை மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் கல்வி, முகவரி, சாதி, இதர தகுதிகள் உள்ளிட்ட உரிய சான்றுகளுடன், தேனாம்பேட்டை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஆக.5-க்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.