அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு 20 சதவீதம் பேர் வரவில்லை

என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு 20 சதவீதம் பேர் வரவில்லை. அது என்ஜினீயரிங் மீதான மோகம் குறைந்தது காணரமாக இருக்கலாம் என்று கல்வியாளர் ஒருவர் தெரிவித்தார்.

கலந்தாய்வு

தமிழ்நாட்டில் 538 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் மாணவ-மாணவிகளை பி.இ., பி.டெக். படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேர்க்க அண்ணாபல்கலைக்கழகம் கலந்தாய்வை நடத்தி வருகிறது. என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இந்த கலந்தாய்வில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொள்கிறார்கள். கலந்தாய்வு இந்த மாதம் இறுதி வரை நடக்கிறது.

என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு 5-ந்தேதி வரை அழைக்கப்பட்டவர்கள் 22 ஆயிரத்து 616 மாணவ-மாணவிகள். அவர்களில் 17 ஆயிரத்து 968 பேர் கல்லூரிகள் மற்றும் இடங்களை தேர்ந்து எடுத்தனர். 4 ஆயிரத்து 452 மாணவ-மாணவிகள் கலந்தாய்வுக்கு வரவில்லை. இது 20 சதவீதம்.

கலந்தாய்வுக்கு 20 சதவீதம்பேர் வராததற்கு காரணம் என்ன என்று கல்வியாளர் ஒருவரிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

கலை, அறிவியல் கல்லூரிகள்

இந்த வருடம் பிளஸ்-2 தேர்வுமுடிவு வந்த உடனே என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர விருப்பம் இல்லாமல் கலை, அறிவியல் கல்லூரிகளில் ஏராளமான மாணவ-மாணவிகள் சேர்ந்துவிட்டனர். அப்படி சேர்ந்த பல மாணவர்கள்தான் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர விண்ணப்பித்துவிட்டு வராமல் இருந்திருப்பார்கள்.

மேலும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம் போன்ற படிப்புகளில் சேர ஆர்வம் உள்ளவர்களும் என்ஜினீயரிங் படிப்பிற்கு விண்ணப்பித்துவிட்டு கலந்தாய்வுக்கு வராமல் இருந்திருப்பார்கள்.

என்ஜினீயரிங் மோகம் குறைந்தது

மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிளஸ்-2 தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் கூட என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்ந்தனர். ஆனால் அந்த நிலை இப்போது மாறியுள்ளது.

என்ஜினீயரிங் மோகம் குறைந்த காரணத்தால்தான் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துவிட்டு வராதவர்கள் 20 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அந்த கல்வியாளர் தெரிவித்தார்.