ஜூலை 19-இல் பி.ஆர்க். கலந்தாய்வு

பி.ஆர்க். (கட்டடவியல் பொறியியல்) சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 19-ஆம் தேதி நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 2015-16 கல்வியாண்டு பொறியியல்
சேர்க்கைக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஜூன் 28-ஆம் தேதி முதல் நடத்தி வருகிறது.
 பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது. 
 பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கி இதுவரை ஏழு நாள்கள் முடிவடைந்துள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழகத் துறைகள், உறுப்புக் கல்லூரிகளில் 4,226 இடங்கள், அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 4,956 இடங்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 16,688 இடங்கள் என மொத்தம் 25,870 இடங்கள் நிரம்பியுள்ளன.
 இதுவரை அழைக்கப்பட்ட 32,901 பேரில் 6,893 பேர் கலந்தாய்வில் பங்கேற்பதைத் தவிர்த்துள்ளனர். 
 138 பேர் கலந்தாய்வில் பங்கேற்றபோதும் இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துள்ளனர். ஜூலை 28-ஆம் தேதி பொதுப் பிரிவு கலந்தாய்வு நிறைவுபெற உள்ளது. 
 இந்த நிலையில் பி.ஆர்க். படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 19-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. காலை 7 மணிக்குத் தொடங்க உள்ள இந்த கலந்தாய்வு மாலை 6.30 மணிக்கு நிறைவுபெறும்.