அனைத்து அவசர உதவிகளுக்கும் விரைவில் வருகிறது ஒரே அவசர உதவி எண் 112

அனைத்து அவசர தேவைகளுக்கும் தொடர்பு கொள்ளக்கூடிய நாடு தழுவிய அளவில் 112 என்ற ஒரே அவசர உதவி எண் விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது 
நடைமுறையில் உள்ள அவசர அழைப்பு எண்களான 100,
101, 102, 108 போன்ற எண்களுக்கு பதிலாக அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கும் ஒருங்கிணைந்த அவசர அழைப்பு எண்ணான '911' போன்று இந்தியாவிலும் புதிய ஒருங்கிணைந்த அவசர அழைப்பு எண்ணாக ‘112’-ஐ பயன்படுத்திக் கொள்ளும்படி மத்திய அரசுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) சிபாரிசு செய்துள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.
24 மணி நேரமும் தொடர்புகொள்ளும் வகையில், செயல்பட இருக்கும் இந்த சேவைமையத்தில், தினந்தோறும் 10 லட்சம் புகார்களுக்கு பதிலளித்து உரிய நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கட்டணமில்லாத இந்த சேவைக்கு தொலைபேசி, அலைபேசி, மெசேஜ் மூலமாகவோ மற்றும் இதற்கென உருவாக்கப்படும் தனி செயலி(ஆப்) மூலமாகவோ ஆபத்தில் சிக்கி தவிப்பவர்கள் தகவல் கொடுக்கலாம்.இந்த கட்டமைப்பு வசதிகளுக்கும், செயல்பாட்டுக்கும் தேவையான பணத்தை நிர்பயா நிதியிலிருந்து பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்தியா முழுவதற்குமான ஒரே அவசர உதவி எண்ணாக செயல்பட்டாலும், இந்தியாவின் எந்த மூலைக்கும் உடனடி உதவி கிடைக்கக்கூடிய வகையில் ‘112’ சேவை மையம் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.