குரூப்-1 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: ஆகஸ்டு 9-ந்தேதி கடைசி நாள்

74 உயர் பதவிகளுக்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது. தேர்வு எழுத இன்று முதல் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி கடைசி நாள்.


குரூப்-1 தேர்வு:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் உயர் பதவிகளுக்கான குரூப்-1 தேர்வை நடத்தி வருகிறது. இந்த வருடத்திற்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது.

துணை கலெக்டர் பணியிடங்கள்-19, போலீஸ் துணை சூப்பிரண்டு பணியிடங்கள் -26, உதவி வணிக வரி அலுவலர்கள் பணியிடங்கள் -21, மாவட்ட பதிவாளர்கள் பணியிடங்கள்- 8 ஆகிய 74 பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது.


இன்று அறிவிப்பு வெளியானதும். தேர்வு எழுத விரும்பும் பட்டதாரிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தற்போது 3 அல்லது 4 ஆண்டு பட்டப்படிப்புக்கான இறுதி செமஸ்டர் தேர்வு எழுதிவிட்டு சான்றிதழுக்காக காத்திருப்போரும் இந்த தேர்வை எழுதலாம்.

கடைசி நாள்:

இந்த தேர்வுக்கு பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி கடைசிநாள்.

இந்த தேர்வு முதல் நிலை தேர்வு, மெயின்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய 3 நிலைகளை கொண்டவை. ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் மறுதேர்வுக்கு செல்லமுடியும்.

துணைகலெக்டர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் அவர்கள் சில வருடங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்கள். அதுபோல துணை சூப்பிரண்டு பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் அவர்கள் சில ஆண்டுகள் கழித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, டி.ஐ.ஜி. ஆகலாம்.

முதல் நிலை (பிரிமிலினரி) தேர்வு நவம்பர் மாதம் 8-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்வு தமிழ்நாடு முழுவதும் 33 மையங்களில் நடக்கிறது. 

குரூப்-4 தேர்வின்சான்று சரிபார்த்தல் 

குருப்-4 தேர்வில் அடங்கிய தட்டச்சர் பதவிக்கு 1,683 காலிப் பணியிடங்களுக்கு கடந்த 2014-ம் வருடம் டிசம்பர் மாதம் 21-ந்தேதி தேர்வு நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்த்தல், ஜூலை 13-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை சென்னை பிரேசர் பாலச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அச்சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 2,176 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். 

மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்புக் கடிதம் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விரைவு தபால் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சான்றிதழ் சரிபார்த்தலுக்கான அட்டவணை தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த தகவலை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன், செயலாளர் விஜயகுமார்ஆகியோர் தெரிவித்தனர்.