தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில்
பல்வேறு அரசுப் பணிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வில் தகுதிபெற்று,
நேர்காணலுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது.இந்தப் பட்டியலை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில்
பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட செய்தி:பல்வேறு
பணிகளுக்கு நடத்தப்பட்டத் தேர்வில் விண்ணப்பதாரர்கள்
பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீடு விதி, அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற
விதிகளின் அடிப்படையில் நேர்காணலுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள
தாற்காலிகப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதில் தமிழ்நாடு எழுதுபொருள்,
அச்சுப்பணித் துறையில் உதவி பணி மேலாளர் பணிக்கான நேர்காணல் வருகிற 24-ஆம்
தேதி காலையில் நடைபெற உள்ளது.
மொத்தம் 8 காலிப் பணியிடங்களைக் கொண்ட இந்தப் பதவிக்கு கடந்த 2014 நவம்பர்
1-ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்வில் பங்கேற்ற 432 பேரில் 22 பேர்
நேர்காணலுக்குத் தகுதிபெற்றுள்ளனர்.இதுபோல் தமிழ்நாடு இந்து சமய அறநிலைய
சார்நிலைப் பணித் துறையில் 23 காலியிடங்களைக் கொண்ட செயல் அலுவலர் நிலை-4
பதவிக்கு 2014 நவம்பர் 16-ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்வில் பங்கேற்ற 20,433
பேரில் 49 பேர் நேர்காணலுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான
நேர்காணல் வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக, வருகிற 22-ஆம் தேதி
காலை 10 மணிக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் மூலச் சான்றிதழ்களுடன்
தேர்வாணைய அலுவலகத்தில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் சார்நிலை பணியான புள்ளியியல்
ஆய்வாளர்பதவியில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு கடந்த 2014 அக்டோபர் 11-ஆம்
தேதிநடத்தப்பட்டத் தேர்வில் பங்கேற்ற 1,623 பேரில் 18 பேர் நேர்காணலுக்கு
தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் வருகிற 24-ஆம் தேதி
மதியம் நடைபெற உள்ளது.