எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு முடிந்தது; காலியிடம் இல்லை

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, முதற்கட்ட கலந்தாய்வு நேற்றுடன் முடிந்தது. 2,839 இடங்களும் நிரம்பின; ஒரு இடம் கூட காலியில்லை. கடந்த ஆண்டில், பிளஸ் 2 முடித்த, 544 பழைய மாணவர்களுக்கும், இடம் கிடைத்துள்ளது.

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, முதற்கட்ட கலந்தாய்வு, 19ம் தேதி, சென்னை ஓமந்துாரார் மருத்துவமனையில் துவங்கியது. ஏழு நாட்கள் தொடர்ந்து நடந்த கலந்தாய்வு, நேற்றுடன் முடிந்தது. ஒரு இடம் கூட காலியில்லாமல், அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன.
இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்குனர் கீதாலட்சுமி கூறியதாவது:
முதற்கட்ட கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட, 3,979 பேரில், 3,620 பேர் பங்கேற்றனர்.
அரசு கல்லுாரியில், 2,257; சுயநிதிக் கல்லுாரிகளில், 597 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; அரசு பல் மருத்துவக் கல்லுாரியில், 85 இடங்கள் என, அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன. தற்போது, 744 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்; பழைய மாணவர்கள், 544 பேர், அரசு கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., இடங்களை தேர்வு செய்துள்ளனர்.
இந்திய மருத்துவக் கவுன்சிலான, எம்.சி.ஐ., அனுமதிக்கேற்ப உருவாகும் இடங்கள், சுயநிதிக் கல்லுாரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு, பி.டி.எஸ்., இடங்களுக்கும் சேர்த்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, ஜூலை இறுதியில் நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

சேர்க்கை சான்று இல்லை
கடந்த ஆண்டில், பிளஸ் 2 முடித்த, பழைய மாணவர்கள் கலந்தாய்வில் ஆதிக்கம் செலுத்துவது தொடர்பான வழக்கில், 'சேர்க்கை கடிதம் தரக்கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், இடம் தேர்வு செய்த மாணவர்களுக்கு, சேர்க்கை கடிதம் வழங்கப்படவில்லை. கோர்ட் நடைமுறைகள் முடிந்த பின் கிடைக்கும்.


'கட் - ஆப்' குறைவு
கடந்த ஆண்டு, எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வில், அரசு கல்லுாரிகளில், இதர பிரிவில் - 199.00; பிற்படுத்தப்பட்டோர்- 198.25; பிற்படுத்தபட்டோர் (மு) - 197.00; மிக பிற்படுத்தப்பட்டோர் - 1 97.50; ஆதிதிராவிடர் - 194.50; எஸ்.சி., (அ) - 191.75; பழங்குடியினர் - 187.50 வரை இடங்கள் கிடைத்தன.
இந்த ஆண்டில், அறிவியல் பாடங்களில், 'சென்டம்' எடுத்தோர் எண்ணிக்கை குறைவால், கட் - ஆப், 0.50 வரை குறையும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட் - ஆப், 1 முதல், 2.5 வரை குறைந்துள்ளது. சுயநிதிக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டு, பி.டி.எஸ்., இடங்கள் முதற்கட்ட கலந்தாய்வில் சேர்க்கப்படவில்லை