நாட்டிலே முதல்முறையாக ஐ.ஐ.டி.யில் மருத்துவப் படிப்பு

நாட்டிலேயே முதன் முறையாக ஐஐடி கல்வி மையத்தில் இனி மருத்துவப் படிப்பும் பயிலும் சூழல் உருவாகியுள்ளது.
இந்திய தொழில்நுட்ப கல்வியகமான ஐஐடி- பொறியியல் கல்வியை பயிற்றுவிப்பதில் உலகப் புகழ் பெற்றது.
இந்நிலையில் ஐ.ஐ.டி.காரக்பூரில், விரைவில் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காரக்பூர் ஐஐடி இயக்குநர் பார்தா பிரதிம் சக்ரபர்த்தி கூறும்போது, "3 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுவரும் 400 படுக்கைகள் வசதி கொண்ட டாக்டர் பி.சி.ராய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிலையம் 2017-ம் ஆண்டு இறுதிக்குள் முற்றுபெறும்.
அவ்வாறு உருவாகும் பி.சி.ராய் கல்வி நிலையத்தில் மருத்துவ இளங்கலை படிப்பு பயிற்றுவிக்க ஏற்கெனவே எம்.சி.ஐ. (இந்திய மருத்துவக் கழகத்தில்) விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே மருத்துவப் படிப்பை வழங்கும் முதல் ஐஐடி நிறுவனம் என்ற பெருமையை ஐ.ஐ.டி.காரக்பூர் பெறும். பி.சி.ராய் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பொதுமக்களுக்கான மருத்துவ சேவையுடன் பயோமெடிக்கல் தொடர்பான ஆய்வுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்" என்றார்.