எம்.பி.பி.எஸ்.: மாணவர்களுக்கு விடிய விடிய சேர்க்கைக் கடிதம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல் கட்டக் கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்ட 2,939 மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் விடிய விடிய வழங்கப்பட்டு வருகிறது.
 இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் எஸ்.கீதாலட்சுமி கூறியதாவது:
 எம்.பி.பி.எஸ். படிப்பில் கடந்த ஆண்டுகளில் பிளஸ்
2 முடித்த மாணவர்களைச் சேர்ப்பதற்குத் தடை இல்லை என உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளித்தது.
 இதையடுத்து, கலந்தாய்வு நடைபெற்ற ஓமந்தூரார் பல்நோக்கு அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில், பிற்பகல் ஒரு மணி முதல்,தேர்வான மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் அளிப்பதை சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். 
 தொடர்ந்து சேர்க்கைக் கடிதம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பை அளித்தவுடன் கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, "ஓமந்தூரார் அரசு இடத்துக்கு (பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கு) வந்து சேர்க்கைக் கடிதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்' என செல்லிடப்பேசியில் குறுந்தகவல் அனுப்பப்பட்டது.
 இதையடுத்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடனடியாக வந்து சேர்க்கைக் கடிதத்தை பெற்றுச் சென்றனர்.
 40 அலுவலர்கள்: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். கலந்தாய்வில் தேர்வான மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதத்தை தொடர்ந்து இரவு பகலாக அளிக்கும் பணியில் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவைச் சேர்ந்த 40 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
 சேர்க்கைக் கடிதத்தை அளிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) உள்பட வரும் ஜூலை 2-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.
 மருத்துவக் கல்லூரிகள் ஆயத்தம்: சேர்க்கைக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள், உரிய அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் (அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள்), சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரி (அரசு பி.டி.எஸ். இடம்) ஆகியவற்றுக்கு சனிக்கிழமை காலை 9 மணி முதல் சென்று சேர்க்கைக் கடிதத்தைக் காட்டி சேர்க்கையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். 
 சேர்க்கைக் கடிதத்தைப் பெறும் மாணவர்கள் வரும் ஜூலை 2-ஆம் தேதிக்குள் உரிய மருத்துவக் கல்லூரியில் சேருவது அவசியம் என்றார் எஸ்.கீதாலட்சுமி.