அரசு பள்ளிகள் தரத்தை மேம்படுத்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு உத்தரவு

அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் செயல்பாட்டில், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் ஈடுபட வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
நிறுவன இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆசிரியர் பயிற்சி நிறுவன கல்வியாளர்கள், அரசு பள்ளிகளை ஆய்வு செய்து, பள்ளி செயல்பாட்டில் உள்ள சிரமங்களை போக்க உதவ வேண்டும் என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வலியுறுத்தியுள்ளது.

இதன்படி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வட்டாரத்தில், ஒரு அரசு துவக்க அல்லது நடுநிலைப் பள்ளியை, தொடர்ந்து ஒரு பருவம் முழுவதும், மாதந்தோறும் பார்வையிட வேண்டும்; பள்ளி தரத்தை முன்னேற்றும் செயல்பாட்டில் ஈடுபட வேண்டும்.

இந்த பணியை முழுமையாக செயல்படுத்த, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், விரிவுரையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பயிற்சி நிறுவன முதல்வர்களும், வட்டாரத்தில் ஒரு பள்ளியை தேர்வு செய்து, இப்பணியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது