மாணவிகளை விட்டு கழிப்பறையை கழுவ வைத்த தலைமையாசிரியர்:தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

நெல்லை மாவட்டத்தில் மாணவிகளை விட்டு பள்ளி கழிப்பறையை கழுவ வைத்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


இங்குள்ள ஒரு பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் சம்பவ தினத்தன்று இரண்டு மாணவிகளை விட்டு பள்ளி கழிப்பறையை கழுவ வைத்ததாக செய்திகள் வெளியாகின.


இவ்விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நடத்திய விசாரணையின்போது, அந்தப் பள்ளியின் தூய்மைப் பணியாளராக வேலை செய்துவந்த அந்த மாணவிகளின் தாயார் சம்பவ தினத்தன்று வேலைக்கு வராததால் அந்த மாணவிகளை வைத்து கழிப்பறையை தூய்மைப்படுத்தியதாக தெரியவந்தது.

இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினரான நீதிபதி டி.முருகேசன், அந்த இரு மாணவிகளுக்கும் இழப்பீடாக ரூ. 25 ஆயிரம் வழங்கினால் என்ன? ஏன்பது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மேலும், அந்தப் பள்ளியில் தூய்மைப்பணி செய்துவந்த இந்த மாணவிகளின் தாயாருக்கு மாதச் சம்பளமாக வெறும் 20 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வந்ததை எவ்விதத்திலும் நியாயமான அளவுக்கோலாக கருத முடியாது என குறிப்பிட்டுள்ள நீதிபதி, இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை செயலாளர் எடுத்த நடவடிக்கை என்ன? என இன்னும் 6 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவத்துக்கு காரணமான தலைமை ஆசிரியை மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.