அரசு ஊழியர்களுக்கு ஆதார் எண் அவசியம்: கருவூலத் துறை சுற்றறிக்கை-இந்த மாதத்துக்கான ஊதியத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா?

தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் அடிப்படை விவரங்களுடன் ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும் என்று கருவூலத் துறை அறிவுறுத்தியது.தமிழக அரசு ஊழியர்களில் பலருக்கும் ஆதார் எண் இல்லாத காரணத்தால், கருவூலத் துறையின் இந்த அறிவிப்பு அவர்களை பதற்றம் அடையச் செய்துள்ளது. இதனால், இந்த மாதத்துக்கான ஊதியத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமோ என்றும் ஊழியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.  

         தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் அடிப்படைத் தகவல்களைச் சேகரித்து அவர்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் முழுமையான அளவில் முடிக்கப்படவில்லை. இதனால், எந்தத் துறையிலும் ஆதார் எண்ணை இதுவரை கட்டாயமாக்கவில்லை.  
கருவூலத் துறையின் திடீர் உத்தரவு: எந்தப் பணிகளுக்கும் ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக அரசின் கருவூலத் துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தல் அரசு ஊழியர்களை அச்சமடையச் செய்துள்ளது. 


இதுகுறித்து கருவூலத் துறை வெளியிட்ட கடித விவரம்:



தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களின் ஊதியப் பட்டியல்கள் இணையதளத்தில் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றன. அதில், பணியாளர்கள் அனைவரின் அடிப்படை விவரங்களும் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளன. இப்போது இந்த அடிப்படை விவரங்களுடன் ஆதார் எண் விபரத்தையும் பதிவேற்றம் செய்யுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.


எனவே, இணையதளத்தில் ஊதியப் பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் அனைத்து அரசு அலுவலகங்களும் தங்களது அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களின் அடிப்படை விபரங்களில் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும்.


இந்தப் பணியை ஜூன் மாத ஊதியப் பட்டியல் சமர்ப்பிக்கும்போது முழுமையாக முடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.


சம்பளம் கிடைக்குமா? அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி சம்பளப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, 19-ஆம் தேதிக்குள் கருவூலத் துறையிடம் வழங்கப்பட்டு விடும். இந்த நிலையில், பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு ஆதார் எண் இல்லாத காரணத்தால் அதை இந்த மாதத்துக்குள்ளே (ஜூன்) முடிக்க முடியுமா என்று அரசு ஊழியர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இதனால், ஜூன் 30-ஆம் தேதி சம்பளம் கிடைக்குமா என்று தெரியவில்லை எனவும், ஆதார் எண்ணை சமர்ப்பிக்க போதிய காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.