காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகளில்
சேர, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர்
வே.க.சண்முகம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டின்
கீழ் இயங்கி வரும் விடுதிகளில், நிகழாண்டுக்கான மாணவர்
சேர்க்கை தொடங்க உள்ளது. இந்த விடுதிகளில் சேர விரும்பும், ஆதிதிராவிடர்,
பழங்குடியினர், பிற்பட்டோர், இதர வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
இந்த விடுதிகளில் சேர, பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு
மிகாமல் இருக்க வேண்டும். மாணவர்கள் வசிக்கும் இடத்துக்கும், விடுதிக்கும்
இடையே 5 கி.மீ. தொலைவு இருக்க வேண்டும் (இது மாணவிகளுக்குப் பொருந்தாது).
மேலும், இந்த விடுதிகளில் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கு கூடுதலாக 5
இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
தகுதியான மாணவ, மாணவிகள் விடுதிக் காப்பாளரை அணுகி விண்ணப்பத்தைப் பெற்று
ஜூலை 7-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். கல்லூரி விடுதியில் சேர
விரும்பும் மாணவ, மாணவிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 15-ஆம்
தேதிக்குள் காப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.