ஆய்வக உதவியாளர் தேர்வு: மாவட்ட வாரியாக கட்ஆப் மதிப்பெண் கீ ஆன்சர் வெளியீடு இல்லை

அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு: மாவட்ட வாரியாக கட்ஆப் மதிப்பெண் கீ ஆன்சர் வெளியீடு இல்லை
அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு மாவட்ட வாரியாக கட்ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட உள்ளது. அரசு மேல்நிலை மற்றும்  உயர்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள 4 ஆயிரத்து 362
ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மே 31ல் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.  இத்தேர்வை 7 லட்சத்து 32 ஆயிரம் பேர் எழுதினர். விடைத்தாள் மதிப்பீட்டுக்கான ஆரம்பநிலை பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
முதல்  கட்டமாக எழுத்து தேர்வு அடிப்படையில் ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதாச்சாரத்தில் நேர்காணலுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு  செய்யப்படுவார்கள். மாவட்ட வாரியாக காலியிடங்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள் மாவட்ட அளவில் அறிவிக்கப்பட்டுள்ளதால் மாவட்ட வாரியாக கட்ஆப் நிர்ணயிக்கப்பட உள்ளது. குறிப்பிட்ட மாவட்டத்தில்  அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு ஏற்ப ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு  அனுமதிக்கப்படுவார்கள். கட்ஆப் மதிப்பெண் மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடும். குறிப்பிட்ட மாவட்டத்தில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை,  அந்த மாவட்டத்தில் தேர்வெழுதியவர்களின் மதிப்பெண் நிலை ஆகியவற்றுக்கு ஏற்ப கட்ஆப் மதிப்பெண் அமைந்திருக்கும்.
தேர்வுத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘‘ஏற்கனவே காலிப்பணியிடம் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் விடைத்தாள் மதிப்பீட்டு  பணி, கட்ஆப் மதிப்பெண் ஆகியவை மாவட்ட அளவிலேயே இருக்கும். ஒரு மாவட்டத்தில் குறிப்பிட்ட மதிப்பெண் எடுத்த ஒரு விண்ணப்பதாரர்  நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பார். வேறு மாவட்டத்தில் இதே மதிப்பெண் பெற்ற தேர்வருக்கு நேர்காணல் வாய்ப்பு வராமல் போகலாம்.  இத்தேர்வுக்கு கீ ஆன்சர் எதுவும் வெளியிடப்படாது,’’ என்றார். 
எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணை கணக்கில் கொள்ளாமல், நேர்காணல் அடிப்படையிலேயே ஆய்வக உதவியாளர்களை தேர்வு செய்யும் பள்ளிக்கல்வித்  துறையின் முடிவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு  பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.