அரசு உதவிபெறும் பள்ளிகளில் கட்டாய வசூல்: ஏழை மாணவ, மாணவியர் கடும் பாதிப்பு

சேலம்: 'அரசு உதவிபெறும் பள்ளிகளில், கல்விக் கட்டணம் போர்வையில், பல ஆயிரம் ரூபாய் வரை, கட்டாயமாக வசூல் செய்யப்படுவதால், மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர் என, பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.

கல்விக்கட்டணம்: தமிழகத்தில், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களது கல்விக்கட்டணம், தேர்வுக்கட்டணம் உட்பட, அனைத்து கட்டணங்களையும், தமிழக அரசு ஏற்றுக்கொள்கிறது. மேலும், பள்ளி பராமரிப்பு, ஆசிரியர் சம்பளம் உள்ளிட்ட, பல தலைப்புகளில் நிதி ஒதுக்கீடும் செய்யப்படுவதால், மாணவர்களிடம் பணம் வசூலிப்பதற்கு தடையும் விதித்துள்ளது.நிதியுதவி பெறும் பள்ளிகளில், இந்த விதிகள் கண்டு கொள்ளப்படுவதில்லை. ஓரிரு பள்ளிகளை தவிர, மற்ற பள்ளிகள், மாணவர்களிடம், கட்டாயமாக கட்டணம் வசூலிக்கின்றன. இதற்கு, எவ்வித ரசீதும் வழங்கப்படுவதில்லை. சேலம் மாநகரத்தில் மட்டுமே, 20க்கும் மேற்பட்ட நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்ளன.

இவற்றில், தற்போது கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில், மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகின்றன. இது மட்டுமின்றி, ஏற்கனவே படித்து வரும் மாணவர்களிடமும், கல்விக்கட்டணமாக, 3,000 ரூபாய் முதல், 12 ஆயிரம் ரூபாய் வரை, கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது. சுயநிதி பள்ளிகளை போன்றே, உதவிபெறும் பள்ளிகளும், கட்டணத்தை உயர்த்தியிருப்பது, பெற்றோரை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து, பெற்றோர் சிலர் கூறியதாவது:சேலம் மாநகரில், பல பகுதிகளில், உதவிபெறும் பள்ளிகள் மட்டுமே உள்ளன. உதவிபெறும் பள்ளிகளையும், அரசு பள்ளிகளாகவே கருதுவதால், அப்பகுதிகளில், அரசு பள்ளி துவக்கப்படுவதும் இல்லை. இதனால், வசதியில்லாத பெற்றோரும், தங்கள் குழந்தைகளை, உதவிபெறும் பள்ளியிலேயே சேர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இப்பள்ளிகளில், கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது என, அரசு உத்தரவிட்டிருந்தும், அதை கண்டுகொள்ளாமல், பள்ளி நிர்வாகத்தினர், ஆண்டுக்காண்டு, வசூலையும் அதிகரித்து வருகின்றனர்.


வசூலித்த தொகை:

பல பள்ளிகளில், கடந்த ஆண்டு வசூலித்த தொகையை விட, நடப்பாண்டில், இரு மடங்கு அதிகமாக வசூலிக்கின்றனர். இதனால், பல பெற்றோர் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.இதுகுறித்து, பள்ளி நிர்வாகத்தில் கேட்டால், 'பணம் கட்ட முடியவில்லை என்றால், 'டிசி' வாங்கி செல்லுங்கள்' என, மிரட்டல் விடுக்கின்றனர்.
கண்டுகொள்வதில்லை:

புகார் செய்வதாக கூறினாலும், 'எங்கு வேண்டுமானாலும் புகார் செய்யுங்கள், கவலை இல்லை' என, விரட்டுகின்றனர். இதற்கேற்ப, கல்வித் துறை அலுவலர்களும், நிதியுதவி பெறும் பள்ளிகளில் நடக்கும் வசூல் வேட்டையை கண்டுகொள்வதில்லை.ஆசிரியர் சம்பளம் உள்ளிட்ட, பல்வேறு நிதி வழங்கும் பள்ளிகளிலேயே, மாணவர்களுக்கு இலவச படிப்பை உறுதி செய்ய முடியாமல், கல்வித் துறை அலுவலர்கள் தவிக்கின்றனர். இதனால், கல்வித் துறை மீது, பொதுமக்களிடம் இருந்த நம்பிக்கை, குறைந்து கொண்டே செல்கிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.