அரசு வேலையில் வயது வரம்பு சலுகை காட்ட முடியாது

மதுரை:'அரசு வேலைவாய்ப்பில், வயது வரம்பு சலுகை காட்ட முடியாது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. தேனி, பெரியகுளம், கெங்குவார்பட்டியைச் சேர்ந்த கனி என்பவர் தாக்கல் செய்த மனு:

கனரக வாகனம் ஓட்ட உரிமம் பெற்று, கடந்த, 2002ல், தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். 13 ஆண்டுகளாக, எந்த நேர்காணலுக்கும் அழைக்கவில்லை.

கடந்த, மே, 1ல், மருத்துவப் பணிகள் நியமன தேர்வு வாரியம், டிரைவர் பணிக்கு அறிவிப்பு வெளியிட்டது. அதில், வயது வரம்பு, 35 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பரிந்துரைக்கப்பட்ட பதிவு மூப்பு பட்டியலில், என் பெயர் இல்லை. ஜூலை, 1ம் தேதியை தகுதியாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பை விட, 24 நாட்கள் கடந்ததாகக் கூறி, நிராகரித்தனர்.

வயது வரம்பை தளர்த்தி, நேர்காணலில் பங்கேற்க அனுமதித்து, பணி நியமனம் வழங்க, கலெக்டர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவித்திருந்தார்.

இதை விசாரித்து, நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:மனுதாரருக்கு, ஜூலை, 1ம் தேதி நிலவரப்படி, 24 நாட்கள் வயது வரம்பு கடந்து விட்டது. மனுதாரருக்கு மட்டும், சலுகை காட்ட முடியாது. வயது வரம்பு உட்பட, நிர்வாக முடிவுகளில், தலையிட முடியாது. சலுகை வழங்கினால், மனுதாரர் போல், பாதிக்கப்பட்டுள்ள பலர் சலுகை கோருவர்; மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.