பார்வை குறைபாடு உள்ளோருக்கு அரசு பணிகளில் வயது வரம்பு சலுகை

மத்திய அரசு பணிகளில் நேரடி நியமனம் செய்யப்படும், பார்வையின்மை, காது கேளாமை, கை, கால் மூட்டு செயலின்மை, பெருமூளை பாதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு, வயது வரம்பு, 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை, நேற்று வெளியிட்ட அறிக்கை விவரம்:
மத்திய அரசு பணிகளுக்கு நேரடி நியமனம்
செய்யப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு தளர்த்தப்பட்டு உள்ளது. பொதுப் பிரிவை சேர்ந்த பார்வையின்மை, காதுகேளாமை, கை, கால் மூட்டு செயலின்மை, பெருமூளை பாதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கான வயது வரம்பு, 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது. பார்வைக் குறைபாடு போன்றவை, குறைந்தபட்சம், 40 சதவீத குறைபாடு உள்ளோருக்கு இச்சலுகை வழங்கப்படும். இக்குறைபாடுகள் உள்ளோர், தாழ்த்தப்பட்ட, மலைவாழ் இனத்தவராக இருந்தால், 15 ஆண்டுகளும், மிகவும் பிற்பட்ட வகுப்பினராக இருந்தால், 13 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்த்தப்படுகிறது.
அதிகபட்சமாக, 56 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.இவ்வாறு, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.