வரி ஏய்ப்பு செய்வோர் மீது கடும் நடவடிக்கை: வருமானவரி இலாகா எச்சரிக்கை

அண்மையில் டெல்லியில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தேசிய மாநாடு நடந்தது. இதில் வருமான வரி இலாகாவின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாநாட்டுக்கு மத்திய நேரடி வரிகள்
வாரியத்தின் தலைவர் அனிதா கபூர் தலைமை தாங்கினார்.
மாநாட்டில் தொடர்ந்து ஏரி ஏய்ப்பு செய்வோர் மீது எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பான உத்திகள் அறிக்கை ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில் கடந்த நிதியாண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி இலாகாவினர் திடீர் சோதனை மற்றும் ஆய்வுகள் மேற்கொண்டதாகவும், அப்போது ஏறக்குறைய 100 பேர்(10 சதவீதம்) வரை தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வருமான வரி இலாகா நோட்டீசு அனுப்பிய பிறகும் ஏராளமானோர் தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்வதை வாடிக்கையாக கொண்டு இருப்பதும், அவர்கள் வருமான வரி செலுத்தாமல் தப்பிக்க தங்களுடைய முகவரியை மாற்றிக் கொள்வதும், தங்களது வருமான ஆதாரத்தை மறைப்பதும் தெரிய வந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
இது பற்றி மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் அனிதா கபூர் கூறியதாவது:-
கருப்பு பணத்தை கண்டுபிடிக்க மத்திய அரசு எடுத்து வரும் கடும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து செலுத்தப்படாத வரி மற்றும் அபராதம் போன்றவற்றை பெறுவதில் வருமான வரி இலாகா தனது வழக்கமான உத்திகளை மாற்றிக் கொண்டுள்ளது. இப்பிரச்சினையை கோர்ட்டு வரை கொண்டு செல்கிறது.
வரி நிர்வாகத்தை பொறுத்தவரை இதுபோன்று தலையிடக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதே நேரம் குறிப்பிட்ட சிலருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. எங்களுக்கு சோதனையிடவும், வருமான வரிச் சட்டத்தின்படி சொத்துகளை பறிமுதல் செய்யவும் அதிகாரம் இருக்கிறது. வரி ஏய்ப்பு செய்வதை தடுக்கும் வகையில் சில வழக்குகளில் எங்களுடைய அதிகாரத்தை காட்ட வேண்டியும் உள்ளது.
நீண்டகாலமாக வரி ஏய்ப்பு செய்வோரிடமிருந்து அபராதத்தையும், செலுத்தப்படாத வரியையும் பெற மட்டுமே நாங்கள் விரும்புவதில்லை. அதைச் செய்வது மட்டுமே எங்களுடைய நோக்கமும் அல்ல. இது போன்றதொரு முறையில் வரி ஏய்ப்பு செய்பவர் எளிதான தண்டனையோடு தப்பிட விட வாய்ப்பு இருக்கிறது.
எனவே தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்வோர் மீது வழக்கு தொடர சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.