6 முதல் பிளஸ் 2 வரை 'ஸ்பெஷல் கிளாஸ்'

அரசு பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்க, கல்வி ஆண்டின் துவக்கம் முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 2 உட்பட அனைத்து வகுப்புகளுக்கும், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தற்போது, சென்னை உள்ளிட்ட நகரங்களில், காலை, 9:00 மணிக்கு வகுப்புகள் துவங்கி, மாலை, 3:30 மணிக்கு முடிகிறது. கிராமங்கள் அதிகமுள்ள மாவட்டங்களில், 9:30 மணிக்கு பள்ளி துவங்கி, 4:00 மணிக்கு முடிகிறது. சிறப்பு வகுப்புகளை, காலை மற்றும் மாலை நேரங்களில் நடத்த, ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, காலையில் பள்ளி துவங்கும் முன், ஒரு மணி நேரம்; 10 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, மாலையில் வகுப்புகள் முடிந்த பின், ஒன்றரை மணி நேரம், சிறப்புப் பயிற்சி வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
'இந்த திட்டத்தில், தினமும் எந்த பாடத்துக்கு சிறப்பு வகுப்பு என்பதை, ஆசிரியர்கள்
முன்கூட்டியே அட்டவணை தயாரித்து, தலைமை ஆசிரியருடன் ஆலோசித்து முடிவு செய்து கொள்ள வேண்டும்; ஆசிரியர் இல்லை என்ற காரணம் காட்டி, சிறப்பு வகுப்பை ரத்து செய்யக் கூடாது' என, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.