ஓமந்தூரார் மருத்துவ கல்லூரிக்கு கிடைத்தது அனுமதிஎம்.பி.பி.எஸ்., இடங்கள் 2,655 ஆக உயர்வு

தமிழக அரசு புதிதாக துவக்கிய, ஓமந்துாரார் தோட்ட அரசு மருத்துவக் கல்லுாரிக்கு, மத்திய அரசின் முறையான அனுமதி கிடைத்துள்ளது. புதிதாக, 100 இடங்கள் சேர்வதால், அரசு கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., இடங்கள் எண்ணிக்கை, 2,665 ஆக உயர்ந்துள்ளது.


மருத்துவ கல்லுாரி:சென்னை, ஓமந்துாரார் தோட்ட வளாகத்தில், கடந்த தி.மு.க., ஆட்சியின் போது கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அரசு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இதையொட்டிய பகுதியில், புதிய மருத்துவக் கல்லுாரியையும் அரசு துவக்கி உள்ளது.இதற்காக, 200 கோடி ரூபாய் செலவில், கட்டுமானப் பணி முடிந்து, கல்லுாரி செயல்பாட்டுக்கு தயாராக உள்ளது. கல்லுாரி செயல்பட, இந்திய மருத்துவ கவுன்சிலான எம்.சி.ஐ., அனுமதி தேவை. எம்.சி.ஐ., பிரத்யேக குழு, இரண்டு கட்ட ஆய்வுகளை முடித்து, இரண்டு மாதத்திற்கு முன் அறிக்கை சமர்பித்தது.இதை ஏற்ற, எம்.சி.ஐ., 'புதிய கல்லுாரியில், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கலாம்' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைத்தது.

பரிந்துரை அளித்து, 20 நாட்களுக்கு மேலாகியும், சுகாதார அமைச்சகம் அனுமதி குறித்து ஆய்வில் இருந்தது. நேற்று முன்தினம் இரவு, புதிய கல்லுாரியின் செயல்பாடு, மாணவர் சேர்க்கைக்கு முறையான அனுமதியை அளித்துள்ளது. 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள்
இதனால், அரசின், 20வது மருத்துவக் கல்லுாரியாக, அரசினர் தோட்ட மருத்துவக் கல்லுாரி இணைகிறது.

இந்த கல்லுாரியில், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கப்பட உள்ளனர். மேலும், அரசு கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., இடங்கள் எண்ணிக்கை, 2,555ல் இருந்து, 2,655 ஆக, உயர்கிறது. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு, 15 சதவீத இடங்கள் போக, மாநிலத்திற்கு கிடைக்கும், எம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கை, 2,172ல் இருந்து, 2,257 ஆக உயர்கிறது