பி.இ., ௨ம் ஆண்டு கவுன்சிலிங் ஜூன் 26ல் தொடக்கம்:91 ஆயிரம் இடங்கள் காலி

காரைக்குடி:பி.இ.,பி.டெக்.,இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கவுன்சிலிங் காரைக்குடியில் வரும் 26ம் தேதி தொடங்கி, ஜூலை 9ம் தேதி முடிகிறது.பி.எஸ்சி., டிப்ளமோ முடித்தவர்கள், பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேருவதற்கான கவுன்சிலிங், காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லுாரியில் வரும் 26-ம் தேதி தொடங்கி, ஜூலை 9 வரை நடக்கிறது. மொத்தம் 35 ஆயிரம்
விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டதில், 19 ஆயிரத்து 629 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 94 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 15 நாள் கவுன்சிலிங் நடக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள 523 கல்லுாரிகள் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்காக, சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரம். 91 ஆயிரத்து 371 இடங்கள் காலியாக உள்ளன.

இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலாளர் மாலா கூறும்போது: இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, இன்று முதல் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. முதல் முறையாக எஸ்.எம்.எஸ்., மூலமும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அழைப்பு கடிதம் கிடைக்காதவர்கள் www.accet.edu.in, www.accet.co.in ஆகிய இணையதளங்களில், தங்களுக்குரிய கட்--ஆப் அடிப்படையில் பங்கேற்கலாம்.26-ம் தேதி விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கும், 27-ம் தேதி பொதுப்பிரிவான சிவிலுக்கும், 30-ம் தேதி மெக்கானிக்கல், ஜூலை 5-ம் தேதி எலக்ட்ரிக்கல் பிரிவுக்கும் கவுன்சிலிங் நடக்கிறது.
9-ம் தேதி பிளஸ் 2-வில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து படித்த, பி.எஸ்சி., மாணவர்களுக்கும் கவுன்சிலிங் நடக்கிறது.கடந்த ஆண்டு டிப்ளமோ படிப்பின் கடைசி இரண்டு பருவ தேர்வு மதிப்பெண் கணக்கிடப்பட்டது. இந்த ஆண்டு ஆறு பருவ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கட்--ஆப் கணக்கிடப்படுகிறது. ஒரு நாளைக்கு 500 மாணவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட உள்ளனர். மொத்தம் ஆறு கால அளவாக கவுன்சிலிங் நடக்கிறது. ஒரு கால அளவு ஒன்றரை மணி நேரமாக கணக்கிடப்படுகிறது.

ஒவ்வொரு நாள் கவுன்சிலிங் முடிந்தவுடன், கல்லுாரியில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை, இணையதளத்தில் உடனே வெளியிடப்படும். காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கவுன்சிலிங் நடக்கிறது, என்றார். உடன் ஒருங்கிணைப்பாளர் கணேசன் இருந்தார்.

மாணவர்கள் கொண்டு வரவேண்டிய ஆவணங்கள்:பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பட்டயபடிப்பு மதிப்பெண், பட்டபடிப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ், இருப்பிட, முதல் பட்டதாரி சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ் இருந்தால் கொண்டு வரலாம்.கலந்தாய்வுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக வர வேண்டும். தரவரிசைக்கு பின் சான்றிதழ் சரிபார்க்கப்படும். ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்ட பின் மாற்றப்பட இயலாது. கலந்தாய்வு அறைக்குள் அலைபேசி அனுமதிக்கப்படமாட்டாது. மறுமதிப்பீட்டில் மாற்றம் இருப்பின், ஒரு மணி நேரத்துக்கு முன்பு, கலந்தாய்வு மையத்தில் தெரிவிக்க வேண்டும்.