மாணவர் இல்லாத 250 அரசு பள்ளிகளுக்கு பூட்டு?கே.ஜி., வகுப்பு துவங்கி மாணவர்களை ஈர்க்க திட்டம்

மாணவர் எண்ணிக்கை குறைந்த, அரசு தொடக்கப் பள்ளிகளில், சென்னை மாநகராட்சி போல், கே.ஜி., வகுப்புகளைத் துவங்க, தொடக்கக் கல்வி இயக்ககம் திட்டமிட்டு உள்ளது. மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை, அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில், தனியார் பள்ளிகளின் மீதான மோகத்தால், அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ளது.


அதேநேரம், அரசு பள்ளி களில் மாணவர்களை சேர்க்க, பெற்றோரிடம் பிரசாரம் செய்யுமாறு, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும், ஒரு பள்ளிக்கு குறைந்தது, 30 மாணவர்களாவது இருக்க வேண்டும்; அவ்வாறு இல்லாத, ஓர் ஆசிரியர் மட்டுமே இருக்கும் தொடக்கப் பள்ளிகளை, அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கவும், தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது; இப்பணியில், தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகில், அழகாபுரி மற்றும் கோவைபுரி ஆகிய இடங்களிலுள்ள தொடக்கப் பள்ளிகள், அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கப்பட்டு உள்ளன.
இவற்றில் தலா, இரு மாணவர்கள் மட்டுமே இருந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும், 250 பள்ளிகள், ஒற்றை இலக்க மாணவர்களுடன் இயங்குவது தெரியவந்துள்ளது; இப்பள்ளிகள் மூடப்பட்டு, அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைக்கப்பட உள்ளன.
இதுகுறித்து, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவனிடம் கேட்ட போது, ''தொடக்கப் பள்ளிகளை மூடும் பேச்சுக்கே இடமில்லை. எப்படியாவது, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உத்தரவிடப்பட்டு உள்ளது.

''ஆகஸ்ட் வரை, மாணவர் சேர்க்கையை தொடர்ந்து நடத்தவும், மாணவர்களை சேர்க்க, ஆசிரியர்கள் தொடர்ந்து முயற்சி எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது,'' என்றார்.
சென்னை மாநகராட்சியில், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்கப் பள்ளிகள், சிறுபான்மை மொழி உருது மற்றும் தெலுங்குப் பள்ளிகளில், 100 இடங்களில், கே.ஜி., ஆங்கில வகுப்புகள் துவங்கி, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

இதை பின்பற்றி, மற்ற மாநகராட்சிப் பள்ளி களிலும், ஆங்கில மழலையர் வகுப்புகள் துவங்க, தொடக்கக் கல்வி இயக்கம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.