சுயநிதி பள்ளிகளில் 25 சத இடஒதுக்கீடு கே.ஜி., - முதல் வகுப்பு வரை மட்டுமே

சிவகங்கை:தனியார் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் கே.ஜி., முதல் ஒன்றாம் வகுப்புகளில் மட்டுமே மாணவர்களை சேர்க்கலாம் என, மெட்ரிக்., பள்ளிகள் இயக்குனரகம் தெளிவுப்படுத்தியுள்ளது.


ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வருமானம் பெறும் பெற்றோர் தங்களது குழந்தைகளை தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்களில் சேர்க்க கட்டாய கல்வி சட்டம் 2009ன்படி 25 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப் பட்டுள்ளது. இதற்கான கல்வி கட்டணத்தை அரசே தனியார் பள்ளிகளுக்கு செலுத்துகிறது.

ஒவ்வொரு சுயநிதி பள்ளியிலும் நுழைவு வகுப்புகளில் சேர்க்கலாம் என்ற உத்தரவின்படி கடந்த காலங்களில் கே.ஜி.,முதல், 6 ,9,11ம் வகுப்புகளிலும் மாணவர்களை சேர்த்தனர். 'நுழைவு வகுப்பு' என்பதை தவறாக புரிந்து கொண்ட சில பள்ளிகள் 6, 9, 11ம் வகுப்புகளிலும் மாணவர்களுக்கு அட்மிஷன் வழங்கியது. இவர்களுக்கான கட்டண நிதி ஒதுக்கீட்டில் சிக்கல் நேர்ந்தது.

இது குறித்து சமீபத்தில் வெளியான மற்றொரு உத்தரவில், “தனியார் சுய நிதி பள்ளிகளில் நுழைவு வகுப்பு என்பது கே.ஜி.,முதல் ஒன்றாம் வகுப்பு வரை என்பதை குறிக்கும். இதன்படி,அட்மிஷன் வழங்கும் பள்ளிகளுக்கு மட்டுமே கல்விக்கட்டணம் வழங்கப்படும்” என, அதில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, கே.ஜி., முதல் ஒன்றாம் வகுப்புக்கு மட்டுமே அட்மிஷன் வழங்க வேண்டும்.

அதிகாரி ஒருவர் கூறுகையில், “ 25 சதவீத ஒதுக்கீட்டில் நுழைவு வகுப்பு என, குறிப்பிட்டது கே.ஜி., முதல் வகுப்பை மட்டுமே. கடந்த சில ஆண்டில் தவறாக அட்மிஷன் வழங்கியதால் இதனை மாற்றியமைக்கும் விதமாக புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாண்டு முதல் 25 சதவீத இட ஒதுக்கீடு அரசாணை சரியான முறையில் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றார்.