எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., தரவரிசை வெளியீடு 200க்கு 200 'கட் - ஆப்' எடுத்து 17 பேர் முதலிடம்

சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பு கலந்தாய்வுக்கான தர வரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 200க்கு 200 'கட் - ஆப்' மதிப்பெண் எடுத்து 17 பேர் முதலிடம் பெற்றுள்ளனர். தர வரிசையில் பழைய மாணவர்கள் 4,679 பேரும் இடம் பெற்றுள்ளனர்.தர வரிசைப் பட்டியலை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட செயலர் ராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.
31,525 பேர் தர வரிசை பட்டியலில் இடம் பெற்றுள்னளர்.இதில் 200க்கு 200 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்று கிருஷ்ணகிரி பள்ளி மாணவர் நிஷாந்த்ராஜன் உட்பட 17 பேர் முதலிடம் பெற்றுள்ளனர். 199.75 'கட் - ஆப்' மதிப்பெண்ணுடன் 37 பேர் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.மாணவர் சேர்க்கை முதற்கட்ட கலந்தாய்வு 19ம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை அரங்கில் நடக்கிறது; 24ம் தேதி வரை நடைபெறும்.



பெண்களே அதிகம்

மொத்த விண்ணப்பம் - 32,184
ஒன்றுக்கு மேலானவை - 215
நிராகரிப்பு - 444
தகுதியுள்ளவை - 31,525
ஆண்கள் - 11,359
பெண்கள் - 20,166
மாநில பாடத்திட்டம் - 30,249
சி.பி.எஸ்.இ., - 1,276
பழைய மாணவர்கள் - 4,679
முதலிடம் பெற்ற 17 பேர்

பெயர் சொந்த ஊர் படித்த ஊர்
1.நிஜாந்த்ராஜன் தர்மபுரி கிருஷ்ணகிரி
2. முகேஷ்கண்ணன் திருச்சி திருச்சி
3. பிரவீன் நாமக்கல் நாமக்கல்
4. நிவாஷ் நாமக்கல் நாமக்கல்
5. சரவணகுமார் சென்னை நாமக்கல்
6. கவுதமராஜு திருப்பூர் நாமக்கல்
7. மோதிஸ்ரீ ஈரோடு நாமக்கல்
8. திராவிடன் பழநி ஒட்டன்சத்திரம்
9. பிரவீன்குமார் விழுப்புரம் நாமக்கல்
10.முகமது பயஸ் தஞ்சை நாமக்கல்
11.சுரண்ராம் நாமக்கல் நாமக்கல்
12.ரேணுகா திருப்பூர் ஈரோடு
13.மோனிஷ் ஈரோடு ஈரோடு
14.கார்த்திக் தூத்துக்குடி தூத்துக்குடி
15.மோகன்குமார் ஈரோடு ஈரோடு
16.நதாஷா தேனி கேரளா
17.அஜித்குமார் கடலூர் திருச்சி

கேரள மாணவி இடம்பெற்றது எப்படி

எம்.பி.பி.எஸ்., தரவரிசை பட்டியலில் கேரள மாநிலம் கூம்பம்பராவில் உள்ள பள்ளியில் படித்த மாணவி நதாஷா 200க்கு 200 'கட் - ஆப்' மதிப்பெண் எடுத்து, 17 பேர் பட்டியலில் முதலிடம் பிடித்தார்; இது சர்ச்சையை ஏற்படுத்தியது.மருத்துவக் கல்வி இயக்க அதிகாரிகள் கூறுகையில் 'நதாஷா, தேனியை பூர்வீகமாக கொண்டவர்; இவர் கேரளாவில் படித்தாலும் தமிழகத்தில் வசிப்பதற்கான 'இருப்பிடச் சான்று' சமர்ப்பித்து உள்ளார். மருத்துவக் கல்வி விதிமுறையில் இதற்கான அனுமதி உண்டு; அதன்படியே மாணவி இடம் பெற்றுள்ளார்' என்றனர்.