அரசு பள்ளிகளிடம் விளக்கம் கேட்கிறது கல்வி துறை

விருதுநகர்: பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தேர்ச்சி சதவீதம் குறைந்த அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்க, கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
அதிகரிப்பு:


தேர்வுகளில், கல்வி மாவட்ட வாரியாக, அரசு பள்ளிகளில், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், கடந்தாண்டை விட அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா என, கணக்கிடப்படுகிறது. குறைந்திருப்பின், அது குறித்து, தலைமையாசிரியர்களிடம் விளக்கம் கேட்க, கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

விருதுநகர் மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: சில அரசு பள்ளிகளில், அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்ச்சி பெறாததால், பொதுத்தேர்வுகளில், மாவட்ட தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்படுகிறது.

விளக்கம்:

இதை தவிர்க்க, இப்பள்ளிகளில் எத்தனை மாணவர்கள், எந்தெந்த பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை; அதற்கான காரணம் என்ன என, தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்படும். பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தை கூட்டி, கருத்தை கேட்டு, ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகளை சரிசெய்து, வரும் கல்வியாண்டில், 100 சதவீத தேர்ச்சிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.