ஆய்வக உதவியாளர் தேர்வு நடக்குமா?

அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வழங்கும் பணி, இரண்டாவது முறையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்வு திட்டமிட்ட படி நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பதவிக்கு, 4,362 இடங்களை நிரப்ப, பள்ளிக்கல்வித்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆனால், 'ஆசிரியர்களை மட்டும் தான் நியமிப்போம். ஏற்கனவே பல நியமனங்கள் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளதால், புதிய தேர்வு நடத்துவது மற்றும் நியமனம் தாமதமாகும்' என, டி.ஆர்.பி., தெரிவித்துவிட்டது. இதையடுத்து, கல்வித்துறையே தேர்வு நடத்த முடிவு செய்து, தேர்வை, அரசு தேர்வுத்துறையிடம் ஒப்படைத்தது. 'தேர்வு, வரும் 31ம் தேதி நடக்கும்' என, அறிவிப்பு வெளியானது. இதில், 8.7 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். முதலில், மே 21ம் தேதி நுழைவுச்சீட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, பின், 23ம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டது. இப்போது, அதுவும் தள்ளிப் போகிறது. 'வரும் 25ம் தேதி நுழைவுச்சீட்டு வழங்கப்படும்' என, இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.