பொறியியல் கல்லூரி தரவரிசைப் பட்டியல் தயாராகிறது! நீதிமன்ற உத்தரவு எதிரொலி

நீதிமன்ற உத்தரவின் எதிரொலியாக, மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையிலான பொறியியல் கல்லூரி தரவரிசைப் பட்டியல் தயாராகி வருகிறது. ஓரிரு நாள்களில் இந்தப் பட்டியலை வெளியிட அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

 

        சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2014-ஆம் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், 2014-15 பொறியியல் சேர்க்கைக்கு முன்னதாக மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் தனியார் பொறியியல் கல்லூரி தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. 

அது, பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. கல்லூரிகளின் உண்மை நிலை குறித்து ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள இந்தப் பட்டியல் உதவியதாக மாணவர்களும், பெற்றோரும் தெரிவித்தனர்.



அதுபோல இம்முறையும் 2015-16 கல்வியாண்டு பொறியியல் சேர்க்கைக்கு முன்னதாக, பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதப் பட்டியல் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர், பெற்றோரிடையே இருந்து வந்தது.


ஆனால், ஒரே மாதிரி பெயர் கொண்ட பொறியியல் கல்லூரி பட்டியல், கல்லூரிகள் குறித்த விவரங்கள் (முகவரி, சேர்க்கை எண்ணிக்கை எவ்வளவு, மாணவர் விடுதிக் கட்டணம் எவ்வளவு) ஆகிய விவரங்களை மட்டும் ஜ்ஜ்ஜ்.ஹய்ய்ஹன்ய்ண்ஸ்.ங்க்ன்ற்ய்ங்ஹ2015 என்ற இணையதளத்தில் பல்கலைக்கழகம் இம்முறை வெளியிட்டுள்ளது.


 மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையிலான கல்லூரி தரவரிசைப் பட்டியலை பல்கலைக்கழகம் வெளியிடவில்லை. 


இது பெருத்த ஏமாற்றத்தை அளித்திருப்பதாக மாணவரும், பெற்றோரும் புகார் தெரிவித்தனர்.இந்த நிலையில், பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை இணையதளத்தில் வெளியிடக் கோருவது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரத்தைச் சேர்ந்த ஜி.வி.வைரம் சந்தோஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் அண்மையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.


இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 13-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்து இரண்டு வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்குமாறு பல்கலைக்கழக பதிவாளருக்கு உத்தரவிட்டனர்.


இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக உயரதிகாரிகள் கூறியது:
நீதிமன்றத்தின் உத்தரவு நகல் செவ்வாய்க்கிழமைதான் பெறப்பட்டது.
இருந்தபோதும், மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்துக்கு கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரப் பட்டியலைத் தயாரிக்கும் பணி இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


 பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தினர் இந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஓரிரு நாள்களில் இந்தப் பணி முடிவடைந்துவிடும்.
 உடனடியாக, மாணவர்களின் பார்வைக்காக இணையதளத்தில் பதிவேற்றமும் செய்யப்படும் என்றனர்.