விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி ஒரு லட்சம் விண்ணப்பங்கள்

மதுரை: ''தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்காக ஒரு லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன,'' என மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய (எஸ்.சி.இ.ஆர்.டி.,) இணை இயக்குனர் அமுதவல்லி தெரிவித்தார்.

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் பணிகளுக்காக (ஜெராக்ஸ்) இவரை சிறப்பு அதிகாரியாக தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் நேற்றுமுன்தினம் நியமித்தார். மதுரை வந்த அமுதவல்லி கூறியதாவது: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு தற்காலிக மதிப்பெண் சான்றுகள் வழங்கப்படுகின்றன. மே 8 முதல் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி மாணவர்கள் விண்ணப்பங்கள் அளித்தனர். அனைத்து மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இன்று முதல் (மே 16) விடைத்தாள் நகல்களை 'ஸ்கேன்' செய்யும் பணிகள் துவங்குகின்றன. இதற்காக பல மாவட்டங்களில் இருந்தும் 50 கல்வி அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட உள்ளனர். 10 நாட்களில் விடைத்தாள் நகல்கள் அனைத்தும் 'ஸ்கேன்' செய்யப்பட்டு தேர்வுத் துறை வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யப்படும். சம்மந்தப்பட்ட மாணவர்கள் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்யலாம். வித்தியாசம் இருந்தால் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கலாம் என்றார்.