பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை: கடந்த ஆண்டு கட் ஆப் இன்று வெளியீடு

காரைக்குடி: பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கையில், கடந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை குறித்த கட் ஆப் மதிப்பெண் விபரங்கள் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
டிப்ளமோ, பி.எஸ்.சி., படித்தவர்கள் பி.இ., பி.டெக்., படிப்பில் இரண்டாமாண்டில் நேரடியாக
சேருவதற்கான விண்ணப்ப வினியோகம், நேற்று முதல் தமிழகத்தில் உள்ள 34 மையங்களில் தொடங்கியது. காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லூரியில் விண்ணப்ப வினியோகத்தை முதல்வர் (பொ) ராஜ்குமார், ஒருங்கிணைப்பாளர் கணேசன் துவக்கி வைத்தனர்.


அவர்கள் கூறும்போது:

கடந்த ஆண்டு மாணவர்களின் சேர்க்கை குறித்த, கட்ஆப் மதிப்பெண்விபரங்கள், இன்று www.accet.edu.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்படும். இதன் மூலம் மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். மாணவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பும் போது, டிப்ளமோ மற்றும் பி.எஸ்.சி., படிப்பின் ஆறு பருவ தேர்வு மதிப்பெண் சான்று நகல், மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்று, வீட்டில் யாரும் படிக்காததற்கான சான்று, 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் நகல் ஆகியவற்றை அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை, ஜூன் 9ம் தேதி மாலை 5 மணிக்குள் செயலர், பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை 2015, அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லூரி, காரைக்குடி-630 004, என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும், என்றனர்.