பள்ளிகள் திறப்பில் மாற்றமில்லை:கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை:'தமிழகத்தில் பள்ளிகள், திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி திறக்கப்படும்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.'தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும், ஜூன் 1ம் தேதி திறக்கப்படும்' என, பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.இந்நிலையில், தமிழகம்
மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக, வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஜூன் முதல் வாரம் வரை, வெயில் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் திறப்பு, ஜூன், 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பு தேதி ஒத்தி வைக்கப்படும் என, பெற்றோர் எதிர்பார்த்தனர். ஆனால், 'தமிழகத்தில், பள்ளி திறப்பு தேதியில் எந்த மாற்றமும் இல்லை. பள்ளி திறக்கப்படும் அன்றே, மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் புத்தகம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.