ஐந்தாண்டு சட்டப் படிப்பு விண்ணப்ப விநியோகம்: தேதி விரைவில் அறிவிக்கப்படும்

ஐந்தாண்டு சட்டப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பம் அச்சடிப்பில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, விண்ணப்ப விநியோகம் தடைப்பட்டுள்ளது. விநியோகிக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளா
கத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் பி.ஏ.-எல்.எல்.பி. (180), பி.காம்.-எல்.எல்.பி. (120), பி.சி.ஏ.- எல்.எல்.பி (60), பி.பி.ஏ.-எல்.எல்.பி. (60) ஆகிய ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே 8-ஆம் தேதி தொடங்கப்படும் என பல்கலைக்கழகம் முன்னர் அறிவித்திருந்தது.
பின்னர், தவிர்க்க முடியாத நிர்வாகக் காரணங்களால் ஐந்தாண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பம் மே 11-ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்தது.
இந்த நிலையில் திங்கள்கிழமையன்றும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகிகள் கூறியது:
விண்ணப்பம் அச்சடிப்பில் ஏற்பட்ட பிரச்னையே, விண்ணப்ப விநியோகம் தொடர்ந்து தடைபடுவதற்குக் காரணம். 
விண்ணப்பங்கள் பிழைகள் திருத்தம் செய்து வந்தவுடன், விநியோகம் தொடங்கப்பட்டு விடும். விரைவில் விநியோகிக்கும் தேதியும் அறிவிக்கப்படும் என்றனர்.