சிவகங்கையில் தேர்ச்சி விகிதத்தை கவிழ்த்த இரு அரசு பள்ளிகள்: தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்'

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை இரு பள்ளிகள் கவிழ்த்து உள்ளது.

கடந்த கல்வியாண்டில் இத்தேர்வை 261 பள்ளிகளை சேர்ந்த 20,684 மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழில் 304 பேரும், ஆங்கிலத்தில்584 பேரும், கணக்கில் 253 பேரும், அறிவியலில் 21 பேரும், சமூக அறிவியலில் 168 பேரும் தோல்வியை தழுவினர். அதிக பட்சமாக ஆங்கிலம், தமிழ், கணக்கு பாடங்களில்தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. 127 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. எஞ்சிய அரசு, தனியார், மெட்ரிக்.,பள்ளிகளில் பெரும்பாலும் 80 முதல் 99 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளது. சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் 158 பேர் தேர்வெழுதியதில் 97 பேரும்( 61.39 சதம்)கோட்டையிருப்பு அரசு மேல் நிலைப்பள்ளியில் 70 பேரில், 51 பேரும்(72.86) தேர்ச்சி பெற்றுள்ளனர். காரைக்குடி ஆர்.எச்., மேனிலைப்பள்ளியைச் சேர்ந்த 4 பேர் மட்டுமே தேர்வெழுதியதில் 4 பேரும் தோல்வி அடைந்தனர். இப்பள்ளிகள் உட் பட ஓரிரு பள்ளிகளால் இம்மாவட்ட தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி அதிகரித்து இருக்கிறது, எனினும் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைந்த சிங்கம்புணரி அரசு ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ள தாகவும், ஓரிரு நாளில் இணை இயக்குனர் அப்பள்ளியை ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும் கல்வித்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சிங்கம்புணரி பள்ளி தலைமை ஆசிரியர் மோகனிடம் கேட்டபோது, "இப்பள்ளியில் பணிபுரியும் நான்கு ஆசிரியர்களின் சரியான ஒத்துழைப்பு இன்றி, தேர்ச்சி விகிதம் குறைந்தது.குறிப்பாக கணக்கு பாடம் புரியவில்லை என, மாணவர்கள் ஏற்கனவே புகார் செய்தனர். இது தொடர்பாக ஒரு சில ஆசிரியர்களை மாறுதல் செய்ய கல்வித்துறையில் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. கணக்கில் மட்டுமே 56 பேரும், தமிழில் 17 பேரும் தோல்வி அடைந்தனர்.வரும் கல்வியாண்டில் தேர்ச்சியை அதிகரிக்க உழைப்போம்,” என்றார்.