தலைமை ஆசிரியர்களிடம் இன்று விசாரணை

பிளஸ் 2 பொதுத் தேர்வில், அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி குறைவு குறித்து, ஆதி திராவிட மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம், மாவட்ட வாரியாக இன்று விசாரணை நடக்கிறது.

பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகள், 84.26; மாநகராட்சி பள்ளிகள், 87; ஆதிதிராவிட பள்ளிகள், 82.43 சதவீதம் என, குறைந்த அளவு தேர்ச்சி பெற்றன. மாநில, மாவட்ட முன்னணி இடங்களையும் அரசு பள்ளி மாணவர்கள் பெறவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி, தேர்ச்சி குறைவுக்கான காரணங்களை அறிக்கையாக தர, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து, அரசு, அரசு உதவிபெறும் மற்றும் ஆதி திராவிட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம், முதன்மை கல்வி அதிகாரிகள் இன்று, மாவட்டந்தோறும் விசாரணை நடத்துகின்றனர். சென்னையில், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இந்த விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணை அறிக்கை, பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும். அதன் படி, ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.