இடஒதுக்கீடு தராத பள்ளிகள் அங்கீகாரம் ரத்து? : பள்ளிகளிடம் விளக்கம் கேட்க உத்தரவு

கட்டாய இலவச கல்விச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இடங்கள் வழங்காத தனியார் மெட்ரிக் பள்ளிகளின் பட்டியலை தயாரித்து, அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை

எடுக்குமாறு, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த ஆண்டுக்கான கட்டாய கல்விச்சட்ட மாணவர் சேர்க்கை மானியம், 120 கோடி ரூபாய் கிடைக்கவில்லை என, தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்தது. 'இந்த நிதியை தராவிட்டால், இந்த ஆண்டு கட்டாய கல்விச் சட்டத்தில் மாணவர் சேர்க்கை நடத்த முடியாது' என்றும் அறிவித்தன.கடந்த, 4ம் தேதி முதல் வரும், 19ம் தேதி வரை, கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் ஒதுக்கீடு இடங்களை அறிவித்து விண்ணப்பம் வழங்க, மெட்ரிக் இயக்குனரகம், பள்ளிகளுக்கு உத்தரவிட்டது.
ஆனால் பல இடங்களில், பெற்றோருக்கு, பள்ளிகள் விண்ணப்பம் தரவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களின் அவசர ஆலோசனை கூட்டம், மெட்ரிக் இயக்குனர் பிச்சை தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது.
இதில், பள்ளிகள் வழங்கிய விண்ணப்ப நிலவரம் மற்றும் மாணவர் சேர்க்கை விவரங்களை, மாவட்ட வாரியாக மெட்ரிக் இயக்குனர் மற்றும் அதிகாரிகள் விசாரித்தனர். பல பள்ளிகள் இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் மெத்தனமாக இருப்பதாக, மெட்ரிக் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அப்பள்ளிகளின் பெயர்களை பட்டியலாக தயாரித்து, அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகள், அங்கீகார நிலை குறித்தும் உரிய ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. பின், விளக்கம் கேட்கவும்; மீறினால், அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.