இன்ஜி., கல்லூரி திறன் பட்டியல் வெளியாவதில் சிக்கல்: ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி இல்லாததால் அண்ணா பல்கலை மவுனம்

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) அனுமதி கிடைக்காததால், தமிழக பொறியியல் கல்லூரிகளின் செயல்பாட்டுத் திறன் பட்டியலை, இந்த ஆண்டு வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில், அண்ணா பல்கலைக்குட்பட்ட, 538க்கும் மேற்பட்ட, பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கான பொறியியல் கல்லூரிகளுக்கு, மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கை துவங்கியுள்ளது. மே 6ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. வரும் 29ம் தேதி வரை, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்கலாம். மாணவர்கள், தங்கள் கல்லூரியை தேர்வு செய்வதற்கு வசதியாக, அண்ணா பல்கலை தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள கல்லூரிகளின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு முதற்கட்டமாக, கடந்த ஆண்டின், 'கட் - ஆப்' மதிப்பெண்ணில், எந்தக் கல்லூரிக்கு எந்த பாடப்பிரிவில், எந்த ஜாதி மாணவருக்கு, இடஒதுக்கீட்டில் இடம் கிடைத்தது என்ற விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, மாணவர்கள் தங்களின், இந்த ஆண்டு, 'கட் - ஆப்' மதிப்பெண்ணைக் கணக்கிட்டு, அதை கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு, தங்கள் மதிப்பெண்ணுக்கு ஏற்ற கல்லூரிகளை தோராயமாக முடிவு செய்யலாம். இதையடுத்து, வரும் ஜூன் 19ல், இந்த ஆண்டு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் தரவரிசையை, அண்ணா பல்கலை வெளியிட உள்ளது. அதே நாளில், கடந்த ஆண்டு மாணவர்களின் தரவரிசையில், எந்த தரத்திலிருந்த மாணவர்களுக்கு, எந்த கல்லூரியில், எந்த பாடம் கிடைத்தது என்று முடிவெடுத்துக் கொள்ள முடியும். அதே நேரம், கல்லூரிகளின் கற்பிக்கும் திறன், தேர்ச்சி சதவீதம் அடிப்படையிலான தரவரிசை அல்லது செயல்பாட்டுப் பட்டியல், இந்த ஆண்டு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஆண்டில், கல்லூரிகளின் தரவரிசை வெளியிடப்பட்ட போது, சில கல்லூரிகள் எதிர்ப்புத் தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கல்லூரிகளின் செயல்பாட்டுப் பட்டியல் மட்டும் வெளியானது. ஆனால், வரும் ஆண்டுகளில், செயல்பாட்டுப் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக, விதிமுறைகள் வகுக்குமாறு, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை ஏ.ஐ.சி.டி.இ.,யில் இருந்து, அண்ணா பல்கலைக்கு, செயல்பாட்டுப் பட்டியல் குறித்த எந்த விதிமுறைகளும் வரவில்லை. அதனால், பொறியியல் கல்லுரிகளின் செயல்பாடுகள் மற்றும் கல்வி புகட்டும் திறன் குறித்த பட்டியல், இந்த ஆண்டில் வெளியிட வாய்ப்பில்லை என, அண்ணா பல்கலை தெரிவித்து உள்ளது. கல்லூரிகளின் தரவரிசை அல்லது செயல்பாட்டுப் பட்டியல் வெளியானால், மாணவர்கள், எளிதில் தங்கள் மதிப்பெண்ணுக்கான தரமான கல்லூரிகளை தேர்வு செய்ய முடியும். ஆனால், தரவரிசையில் பின்தங்கிய பல தனியார் சுயநிதி கல்லூரிகளுக்கு, இது பிரச்னை ஏற்படுத்தும் என்பதால், இந்த பட்டியலை, அண்ணா பல்கலை சுயமாக வெளியிட முடியாத சிக்கல் ஏற்பட்டு உள்ளது.