வெளிநாடு இந்தியர்களுக்கு ஜூலை 9ல் இன்ஜி., கவுன்சிலிங்

சென்னை: வெளிநாடு வாழ் இந்தியர்கள் அண்ணா பல்கலையில் பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, ஜூலை 8 மற்றும் 9ம் தேதிகளில் கவுன்சிலிங் நடக்கிறது.

அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் குரோம்பேட்டை எம்.ஐ.டி., ஆகியவற்றில், 11 பி.டெக்., மற்றும் 20 பி.இ., படிப்புகள் உள்ளன. இவற்றில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களின் பிள்ளைகள் மற்றும் வெளிநாட்டினருக்கு தனியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலை வெளியிட்டு உள்ளது. படிக்க விரும்பும் மாணவர்கள் அண்ணா பல்கலை பெயரில், 200 அமெரிக்க டாலருக்கான 'டிடி' எடுத்து, 'ஆன் - லைனில்' விண்ணப்பிக்க வேண்டும்; ஜூன் 20 வரை விண்ணப்பிக்கலாம். பின், வெளிநாட்டினருக்கு ஜூலை 8ம் தேதியும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஜூலை 9ம் தேதியும் கவுன்சிலிங் நடக்கும். பிளஸ் 2 மற்றும் அதற்கு இணையான படிப்பில் பாடங்களின், 'கட் - ஆப்' அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கும். தேர்வாகும் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள சர்வதேச மாணவர் (துலிப்), மாணவியர் (லேவண்டர்) விடுதிகளில் தங்குமிடம் உண்டு; சர்வதேச உணவு விடுதியில், உணவு வசதியும் உண்டு. கட்டணம், தகுதி, தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்கள் குறித்த கூடுதல் விவரங்களை, https:/www.annauniv.edu/cia/adm.php என்ற அண்ணா பல்கலையின், அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.