அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி: 6 முதல் 9ஆம் வகுப்பு வரை ரூ.200 கட்டணம் அரசு உத்தரவால் பெற்றோர்கள் மகிழ்ச்சி

நிகழ் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி தொடங்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


 
           தனியார் பள்ளிகளிலும், சுயநிதிப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியில் தங்களது குழந்தைகளைச் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் கடும் போராட்டமே நடத்த வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நிகழ் கல்வியாண்டில் ஆங்கில வழிக் கல்வியை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இனி, அரசுப் பள்ளிகளிலேயே தங்களது குழந்தைகளை எவ்வித சிபாரிசு இன்றியும், நன்கொடை என்ற பெயரில் பெரும் தொகையைக் கட்ட வேண்டிய அவசியம் இன்றியும் சேர்க்க முடியும் என பெற்றோர்கள் கூறுகின்றனர். 


இதுமட்டுமின்றி, அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, பென்சில், அட்லஸ், காலணி, புத்தகங்கள், சீருடை உள்பட 14 வகையான பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன. அந்த விலையில்லாப் பொருள்களும் தங்களது குழந்தைகளுக்கு கிடைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

6 முதல் 9ஆம் வகுப்பு வரையே   ரூ.200 கட்டணம்!
திருவள்ளூர் மாவட்டத்தில் தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை 1,200-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இவைகளில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் ஆங்கில வழிக் கல்வியை சுயநிதிப் பிரிவாகக் கருதி ரூ.250 கட்டணம் வசூலிக்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை ரூ.200 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சந்திரசேகர் கூறியது: 

ஆங்கில வழிக் கல்வி சில பள்ளிகளில் தொடங்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் மாணவர்ச் சேர்க்கையைப் பொருத்தே அந்தப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடருமா, தாற்காலிகமாக நிறுத்தப்படுமா என்பது தெரியும் என்றார்.