அரசு மருத்துவ கல்லூரிகளில் 450 இடங்கள்: நடப்பாண்டில் அனுமதி கிடைக்குமா?

அரசு மருத்துவக் கல்லூரிகளில், கூடுதலாக, 450 எம்.பி.பி.எஸ்., இடங்களைப் பெற, அரசு முயற்சித்து வந்த நிலையில், இந்த ஆண்டில் அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு, மாணவர்களிடம் எழுந்துள்ளது.


             தமிழகத்தில், மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ், 19 அரசு மருத்துவக் கல்லூரி களில், 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. மருத்துவப் படிப்புகளுக்கு, மாணவர்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது. சுயநிதிக் கல்லூரிகளில், ஒரு இடத்திற்கு, 60 லட்சம் ரூபாய்க்கும் மேல் நன்கொடை கேட்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதை கருத்தில் கொண்டு, புதிதாக துவங்கப்பட்டுள்ள, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில், 100 இடங்கள்; நான்கு அரசு மருத்துவக் கல்லூரியில், 350 இடங்கள் என, 450 எம்.பி.பி.எஸ்., இடங்களை கூடுதலாக்க, அரசு, இந்திய மருத்துவக் கவுன்சிலின் - எம்.சி.ஐ., அனுமதி கோரியது. இதற்காக, கூடுதல் இடம் கோரும் கல்லூரிகளில், போதிய கட்டமைப்பு வசதிகள் உள்ளதா என, எம்.சி.ஐ., குழு ஆய்வு செய்தது. ஆய்வு முடிந்து இரு மாதங்கள் ஆகும் நிலையில், 450 எம்.பி.பி.எஸ்., இடங்களை, கூடுதல் அனுமதி குறித்து, இன்னும் உறுதியான முடிவுகள் கிடைக்கவில்லை. இந்த ஆண்டில், அரசு எதிர்பார்க்கும், 450 இடங்களுக்கும் அனுமதி கிடைக்குமா என, மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: கோவை, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரிகளில், 350 இடங்களும், புதிதாக துவக்கப்பட்ட, ஓமந்தூரார் கல்லூரியில், 100 இடம் என, 450 கூடுதல் இடங்கள் பெற, அரசு முயற்சி நடந்து வருகிறது. இதில், ஓமந்தூரார் கல்லூரியில், 100 இடங்களுக்கு, எம்.சி.ஐ., பரிந்துரைத்து உள்ளது. மத்திய அரசு அனுமதி கிடைத்ததும், மாணவர் சேர்க்கை நடக்கும். மீதமுள்ள, 350 இடங்களுக்கு அனுமதி பெற, தொடர்ந்து முயற்சி நடக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.