பிளஸ்-2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பள்ளிகளில் கிடைக்கும்

பிளஸ்-2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பள்ளிக்கூடங்களில் வழங்கப்பட இருக்கிறது.


மதிப்பெண் பட்டியல் மட்டுமே...

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 5-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை பிளஸ்-2 தேர்வு நடைபெற்றது.

அதன் முடிவுகள் கடந்த 7-ந்தேதி வெளியிடப்பட்டது. இந்தநிலையில் மருத்துவம், என்ஜினீயரிங், கால்நடை மருத்துவம், கலை-அறிவியல், பாலிடெக்னிக் உள்ளிட்ட உயர்கல்வியில் சேர விண்ணப்பிப்பதற்கு, மாணவ-மாணவிகள் நிரந்தர சான்றிதழ் வரும் வரை காத்திருக்க வேண்டி இருந்தது.

தற்காலிக சான்றிதழ்

இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மாணவ-மாணவிகளுக்கு பிளஸ்-2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடிவு செய்துள்ளது. இதை பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அறிவித்தார். அதன்படி, பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளுக்கு தற்காலிக சான்றிதழ் இன்று முதல் பள்ளிக்கூடங்களில் வழங்கப்பட இருக்கிறது.

எனவே மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளில் சென்று தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம். இந்த சான்றிதழ் 90 நாட்களுக்கு மதிப்புள்ளதாக கருதப்படும்.

இன்னும் சில நாட்களில் இந்த தற்காலிக சான்றிதழ் அரசு தேர்வு துறையின் இணையதளத்திலும் வெளியிடப்பட உள்ளது.