அரசு பள்ளிகளில், பிளஸ் 2 தேர்ச்சி பெறாத
மாணவர்களுக்கு, சிறப்பு, 'டியூஷன்' நடத்த, ஆசிரியர்களுக்கு வாய்மொழி
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்
2 தேர்வில், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்ச்சி
பெறவில்லை. இவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு, ஜூன், 22ம் தேதி
துவங்குகிறது. இந்த தேர்வில் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் அதிக அளவில்
பங்கேற்பர். அரசு, ஆதி திராவிட மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்
பலர் தேர்வுக்கு வருவதில்லை. அப்படியே பள்ளிப் படிப்பை முடிக்காமல்,
பணிகளுக்கு செல்லும் நிலை உள்ளது.
இந்நிலையில்,
பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், வாய்மொழி உத்தரவு ஒன்றை
பிறப்பித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: அரசு, ஆதி திராவிட
மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில், நலிந்த பிரிவு மாணவர்களே படிக்கின்றனர்.
இவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், பின், மீண்டும் தேர்வு எழுத
முயற்சிப்பதில்லை. அதனால், அவர்கள் பள்ளிப் படிப்பை, முழுமையாக முடிக்காத
நிலை ஏற்படுகிறது. இதைத் தடுக்க, சிறப்புத் துணைத் தேர்வுக்கு மாணவர்களை
தவறாமல் பங்கேற்க வைக்குமாறு, பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
விடுப்பு முடிந்து உள்ளூர்களில் இருக்கும் ஆசிரியர்கள், மாணவர் நலன் கருதி
அவர்களை பள்ளிக்கு வரவழைத்து, துணைத் தேர்வு வரை சிறப்புப் பயிற்சி தர
அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.