2,172 இடங்களுக்கு31,000 பேர் போட்டி:மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., ஆர்வம்

சென்னை:தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர 31,332 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட 3,279 விண்ணப்பங்கள் அதிகம்.தமிழகத்தில் 19 அரசு மருத்துவ கல்லுாரிகள், ஒரு அரசு பல் மருத்துவ கல்லுாரிகளும் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 15 சதவீத இடங்கள் போக மாநிலத்திற்கு 2,172 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 85
பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. சுய நிதி கல்லுாரிகளில் இருந்து, 500 இடங்கள் வரை மாநிலத்திற்கு கிடைக்கும்.

இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள். மொத்தம், 35,667 பேர் விண்ணப்பங்கள் பெற்றிருந்தனர். இதில், 31,332 பேரின் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டு 30,380 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு 28,053 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கடந்த ஆண்டை விட 3,279 விண்ணப்பங்கள் அதிகம்.மாணவர் சேர்க்கை செயலர் சுகுமார் கூறுகையில், ''தபாலில் அனுப்பிய விண்ணப்பங்கள், தாமதமாக நாளை (இன்று) கிடைக்க வாய்ப்புள்ளது. அதை சேர்க்க ஆலோசித்து வருகிறோம். கடந்த ஆண்டை விட கூடுதல் இடங்கள் கிடைக்குமா என்பது கலந்தாய்வின் போது தான் தெரிய வரும்,'' என்றார்.