அரசு கலைக் கல்லூரிகளில் இன்று கலந்தாய்வு : ஜூன் 1ல் திறக்க உத்தரவு

காரைக்குடி :அரசு கலை கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. மே 29-க்குள் முடித்து, ஜூன் ஒன்றாம் தேதி முதல் வகுப்புகளை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மறு கூட்டல்,
உடனடி தேர்வு எழுதும் மாணவர்கள் இக்கல்லூரிகளில் சேர முடியாத நிலை உள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவு மே 7-ம் தேதி வெளியானது. தோல்வி அடைந்த மாணவர்களுக்கு அடுத்த மாதம் 22-ம் தேதி சிறப்பு உடனடி தேர்வு நடத்தப்பட உள்ளது. சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், கடந்த 18-ம் தேதியுடன் விண்ணப்பம் வழங்கும் பணி நிறுத்தப்பட்டு, இன்று கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இந்த கலந்தாய்வு 29-ம் தேதிக்குள் முடிகிறது. அரசு கல்லூரியை பொறுத்தவரை, கிராமப்புற மாணவர்களே அதிகம் படித்து வருகின்றனர்.ஜூன் 1-ம் தேதி, கல்லூரி தொடங்கப்படும் என்பதால், சிறப்பு உடனடி தேர்வில், அதிக மதிப்பெண் பெற்றாலும், அரசு கல்லூரியில் சேர முடியாத நிலை உள்ளது.கடந்த ஆண்டுகளில், ஜூன் 20-ம் தேதிக்கு பிறகே கலந்தாய்வு நடத்தப்பட்டு, ஜூலையில் வகுப்பு ஆரம்பித்தது.சிறப்பு உடனடி தேர்வு எழுதியோர், சி.பி.எஸ்.இ., பள்ளியில் படித்தோர் அரசு கல்லூரிகளில் சேரமுடிந்தது. இந்த ஆண்டு, 29-ம் தேதியுடன் முடிவதை தொடர்ந்து, தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இடம் கிடைக்காத நிலை ஏற்படும்.பேராசிரியர் ஒருவர் கூறும்போது: அரசு கலை கல்லூரிகளில் முன்கூட்டியே கலந்தாய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 5 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்கும் கல்லூரிகளில் மூவாயிரம் விண்ணப்பங்களே விற்பனையாகியுள்ளன. கிராமப்புற, ஏழை மாணவர்களின் முதல் தேர்வு அரசு கல்லூரிகள் தான். இம்மாணவர்கள் பாதிக்காத வகையில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும், என்றார்.