ஜூன் முதல் வாரத்தில் பிளஸ் 1 துணைத்தேர்வு

   நடந்து முடிந்த, பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாதோருக்கு, ஜூன் முதல் வாரத்தில் சிறப்பு துணைத் தேர்வு நடத்த, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.


           நடப்பு கல்வியாண்டில், அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் முடிந்து, வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. 10ம் வகுப்புத் தேர்வு முடிவு, மே 21ல் வெளியாகிறது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஐந்து முதல், 10 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். பள்ளிக்கு ஒழுங்காக வராதது; தேர்வில் பங்கேற்காதது; பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட சில காரணங்களால், குறிப்பிட்ட சதவீதத்தினர் மட்டும், தேர்ச்சி பெறவில்லை. இவர்களுக்கு, சிறப்பு துணைத் தேர்வு நடத்தி, அதன் முடிவுகளின் படி, அடுத்த பிளஸ் 2 வகுப்புக்கு அவர்களை உயர்த்த, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான சிறப்புத் துணைத் தேர்வு, ஜூன் முதல் வாரத்தில் நடக்க உள்ளது. சென்னையில், ஜூன் 4ம் தேதி துணைத் தேர்வு துவங்க உள்ளது.