திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், 19 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை மூட, முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டுள்ளார்.
அரசு
அங்கீகாரம் பெறாமல், அடிப்படை வசதியின்றி செயல்படும் நர்சரி மற்றும்
பிரைமரி பள்ளிகளில் போதிய வசதிகளை செய்து ஆவணங்களை சமர்ப்பிக்க, தொடக்கக்
கல்வித்துறை உத்தரவிட்டது. உரிய வசதிகளை ஏற்படுத்தி, விண்ணப்பிக்காத நர்சரி
மற்றும் மழலையர் பள்ளிகளை மூட, தொடக்கக் கல்வி இயக்குனரகம்
உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பல மாவட்டங்களில், உரிய வசதியில்லாத பள்ளிகள்
மூடப்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில், உரிய வசதிகளை செய்யாத
பள்ளி களுக்கு, முதன்மை கல்வி அலுவலகம் சார்பில், மூன்று முறை, 'நோட்டீஸ்'
அனுப்பப்பட்டது. அதன் பின்பும், அப்பள்ளிகளில் போதிய வசதிகளை செய்யாததால்,
19 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை உடனடியாக மூடுமாறு, மாவட்ட முதன்மை
கல்வி அலுவலர் முருகன், நேற்று உத்தரவிட்டார்.
மீறினால் ரூ.1 லட்சம் அபராதம்:
முதன்மை கல்வி அலுவலர் முருகன் கூறியதாவது: 'நோட்டீஸ்' அனுப்பி வலியுறுத்திய பிறகும், போதிய அடிப்படை வசதிகளை செய்யாததால், 19 பள்ளிகளும் உடனடியாக மூடப்படுகின்றன. உத்தரவை மீறி இந்த பள்ளிகள் செயல்பட்டால், 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அதன் பின்பும், அனுமதியின்றி பள்ளி செயல்பட்டால், நாளொன்றுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் சேர்த்து விதிக்கப்படும். பொதுமக்கள், குறிப்பிட்ட பள்ளி களில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.