முதுநிலை பொறியியல் படிப்புகள் மீது குறைந்து வரும் ஆர்வம்: டான்செட் தேர்வில் 19 ஆயிரம் பேர் பங்கேற்பு

முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) தமிழகம் முழுவதும் 15 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
 


       இதில் 19 ஆயிரம் பேர் பங்கேற்று தேர்வெழுதினர். கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும்போது தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் அரசு,அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை "டான்செட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. 


2015-ஆம் ஆண்டுக்கான இந்த நுழைவுத் தேர்வு மே 16, 17 தேதிகளில் நடத்தப்பட்டது. இதில் சனிக்கிழமை நடத்தப்பட்ட முதல்கட்ட தேர்வில் எம்.பி.ஏ. படிப்பில் சேர 18,451 பேரும், எம்.சி.ஏ. படிப்பில் சேர 7,158 பேரும் பங்கேற்றனர்.



ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க். படிப்பு சேர்க்கைக்கான தேர்வில் 19,361 பேர் பங்கேற்றனர். இது கடந்த ஆண்டுகளைவிட மிகக் குறைவு. 


முதுநிலை படிப்புகள் மீதான ஆர்வம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது என்கின்றனர் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள். 


கடந்த 2014-இல் மொத்தம் 96,517 பேர் "டான்செட்' தேர்வுக்குப் பதிவு செய்து பங்கேற்றனர். 2013-இல் எம்.பி.ஏ. படிப்பில் சேர 38,000 பேர், எம்.சி.ஏ.யில் சேர 14,500 பேர், முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர 61,000 பேர் என மொத்தம் 1,13,500 பேர் "டான்செட்' தேர்வுக்கு பதிவு செய்து எழுதினர்.


ஆனால், இம்முறை மூன்று படிப்புகளுக்கும் சேர்த்து மொத்தம் 44,970 பேர் மட்டுமே பதிவு செய்து எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.