ஜூன் 15 முதல் பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க்கையை உடனே துவங்க உத்தரவு

பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தேர்வு முடிவின் மதிப்பெண் மூலம், பிளஸ் 1 வகுப்புக்கு உடனடியாக மாணவர் சேர்க்கை நடத்தவும், ஜூன், 15ல் வகுப்புகளை துவங்கவும், பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தற்காலிக சான்றிதழ்:

தமிழகத்தில், ஆண்டுதோறும் 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகி, ஓரிரு வாரங்கள் கழித்து மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். பின், அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடக்கும். மதிப்பெண் அடிப்படையில் பாடப்பிரிவு பட்டியலிடப்படும். ஜூலை முதல் அல்லது இரண்டாம் வாரம் வகுப்புகள் துவங்கும். இதனால், மாணவ, மாணவியர் ஒன்றரை மாதங்கள் தாமதமாக வகுப்புகளுக்கு வந்து, வேகமாக, 'போர்ஷன்' முடிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டு, முதன்முறையாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. எனவே, மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்த, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது. இதன்படி, 10ம் வகுப்பு முடிவுகள் வந்ததும், மாணவர்களின் மதிப்பெண் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையில், பிளஸ் 1 வகுப்புக்கு மாணவர் சேர்க்கையை, தாமதமின்றி விரைந்து முடிக்க அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

சுற்றறிக்கை:

இதுகுறித்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மாணவர் சேர்க்கையை விரைந்து முடித்து விட்டு, ஜூன் 15ம் தேதி, பிளஸ் 1 வகுப்புகளில் பாடங்களைத் துவக்க வேண்டும் என, அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.